கொழும்பில் நாளை முதல் புதிய போக்குவரத்து திட்டம்!


கொழும்பு வடக்குப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய போக்குவரத்துத் திட்டமொன்றை செயற்படுத்த போக்குவரத்து பொலிசாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மோதரை மற்றும் அளுத்மாவத்தை ஆகிய வீதிகளை ஒருவழிப்பாதையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு போக்குவரத்து காவல்துறை மற்றும் கொழும்பு நகர சபை இணைந்து குறித்த இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

குறித்த போக்குவரத்து திட்டம் நாளை(15) காலை 8 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, கொழும்பிலிருந்து செல்லும் வாகனங்கள் இப்பாவத்தை சந்தியிலிருந்து மோதரை வீதி, ராசமுனகந்த சந்தி, மட்டக்குளி வீதி, கதிரான பாலம் ஊடாக எலகந்த வழியாக பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கொழும்புக்குள் உள்நுழையும் வாகனங்கள் கதிரான பாலம், மட்டக்குளி வீதி, ராசமுனகந்த சந்தி, அளுத்மாவத்தை, இப்பாவத்தை சந்தி, ஹெட்டியாவத்தை வழியாக பயணிக்க முடியும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையிலேயே இந்தப் போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.