டிக்டாக் `காதல் மன்னன் கண்ணன்' - காவல்துறையிடம் சிக்கியது எப்படி!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் கண்ணன். 19 வயது நிரம்பிய கண்ணன் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கு டிக்டாக் செயலியில் அதிக ஈடுபாடு இருந்துள்ளது.



தினமும் விதவிதமான ஆடைகளை அணிந்து, கண்ணைக் கவரும் பசுமை எழில் கொஞ்சும் வித்தியாசமான சூழ்நிலை கொண்ட கிராமப் பகுதியைத் தேர்வு செய்து டிக்டாக் காட்சிகளைப் பதிவு செய்து வெளியிட்டு வந்துள்ளார். `காதல் மன்னன் கண்ணன்’ என்ற பெயரில் பதிவுகளைச் செய்யும் அவரது காட்சிகளுக்கு வரவேற்பு அதிகம் இருந்துள்ளது.

தன்னுடன் படிக்கும் மாணவ, மாணவிகளையும் சில காட்சிகளில் நடைக்க வைத்துப் படம் பிடித்து அவற்றைப் பதிவேற்றம் செய்திருக்கிறார். அவரை டிக்டாக் செயலியில் நான்கு லட்சத்துக்கு அதிகமானோர் பின்பற்றுகின்றனர். அந்த அளவுக்கு அவர் அந்தச் செயலியில் பிரபலமாக இருந்துள்ளார்.


தன்னுடன் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவிகளுடனும் அவர் டிக்டாக் செயலியில் வீடியோ எடுத்துள்ளார். சிலரை அவர்களுக்குத் தெரியாமலே வீடியோ எடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், அந்த வீடியோக்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.

ஒரு கல்லூரி மாணவியிடம் நான்கு லட்சம் ரூபாய் வரை அவர் மிரட்டிப் பணம் பறித்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மற்றொரு மாணவியிடம் இரண்டு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியிருக்கிறார். அச்சமடைந்த அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததால், விவகாரம் காவல்துறை வரை சென்றுள்ளது.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சேர்ந்தமரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்கால நலன் கருதி, சேர்ந்தமரம் போலீஸார் கண்ணன் மீது 397 பிரிவின் கீழ் அவர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்கள். `காதல் மன்னன் கண்ணன்' கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.