`நான் வைத்த புள்ளி அமைதியாக சுழலாக மாறியுள்ளது!' -ரஜினிகாந்த்!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக பல ஆண்டுகளாக விவாதங்களும் குழப்பங்களும் எழுந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து 2017-ம் ஆண்டு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி,
``நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகள் கடந்து சில நாள்களுக்கு முன்னர் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக அதே நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அழைத்து மூன்று திட்டங்களை அறிவித்தார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. ஆனால், அவருடைய ஒவ்வொரு கருத்தும் அவரின் அரசியல் மீதான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ரஜினி பேசியுள்ளார்.


நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில், ``எம்.ஜி.ஆர் அதிக வருடங்கள் தி.மு.க-வில் இருந்தார். கட்சிக்காக நிறையவே உழைத்திருக்கிறார். கலைஞர் முதல்வராக அவரும் ஒரு காரணமாக இருந்தார். பொருளாளராக இருந்து கட்சியின் கணக்கு கேட்டதற்காக அவரையே கட்சியிலிருந்து வெளியேற்றினர். அதனால், அவர்மீது அனுதாப அலை வீசியது. அதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றியடைந்தார். ராஜீவ் காந்தி படுகொலையின் போது தி.மு.க-வுக்கு எதிரான அலை உருவானது. அதையடுத்து 91-ல் வந்த தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானார். அதேபோல, ஆந்திராவிலும் என்.டி.ஆர்-ஆல் அலை உருவானது. எனவே, அலை மிகவும் முக்கியமானது.

நானும் சில நாள்களுக்கு முன்னர் புது புள்ளி ஒன்றை வைத்தேன். அந்தப் புள்ளி அமைதியாக யாருக்கும் தெரியாமல் சுழலாக உருவாகியுள்ளது. இதைத் தடுக்க முடியாது. ஏனென்றால், மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதை இனி வலிமையான அலையாக மாற்ற வேண்டும். அந்த அலை தேர்தல் கரையை நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும். சுனாமியாக மாறுவது ஆண்டவன் கையில்தான் இருக்கு. அது உருவாகும் அதிசயம், அற்புதம் நடக்கும்" என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.