அரியாலை மத போதனையில் கலந்துகொண்டவர்களுக்கு ஆளுநர் முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணம், அரியாலை மத போதனையில் கலந்துகொண்டவர்களுக்கு வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.


குறித்த அறிக்கையில், “யாழ்ப்பாணம், அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது இம்மாதம் 15ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் இருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சுவிஸில் சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை குறித்த ஆராதனையில் கலந்துகொண்ட இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இந்த ஆராதனையில் கலந்துகொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. குறித்த ஆராதனையில் கலந்துகொண்ட மக்களை யாழ்ப்பாண பிராந்திய சேவைகள் பணிமனையின் தொடர்பு இலக்கத்திற்கு (0212227278) உடனடியாகத் தொடர்புகொண்டு தங்களது விபரங்களைத் தெரிவிப்பதன் மூலம் மருத்துவ அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் அவர்களது இடங்களுக்குச் செல்வதன் மூலமாகவும் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஒழுங்குகள் செய்யப்படும்.

இவ்வாறு தம்மை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்வது, தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் பிராந்தியத்திலுள்ள இதர மக்களுக்கும் தற்கால கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலத்தில் அவசியமானதும் பாதுகாப்பானதுமாகும்.

இதேவேளை, மருத்துவ அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும் வரை தங்களை இயன்ற அளவில் பாதுகாப்பாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.