போர்களை நிறுத்துங்கள் - ஐ.நா. அவசர கோரிக்கை!!
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்திவரும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையிலும் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுச் சண்டை, பயங்கரவாதத் தாக்குதல்கள் என இடைவிடாமல் போர்கள் இடம்பெறுகின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இது குறித்து அன்டோனியோ குட்ரெஸ் இன்று விடுத்துள்ள வேண்டுகோளில்,
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களையும், சண்டைகளையும் உடனடியாக நிறுத்தும்படி நான் அழைப்பு விடுக்கிறேன்.
விரோதங்கள், அவநம்பிக்கை, பகைமை ஆகியவற்றில் இருந்து பின்வாங்கி ஆயுதச் சண்டைகளை முடிவுக்குக் கொண்டுவாருங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது உயிரைக் காக்க உண்மையான போர் செய்யும் (கொரோனா வைரஸ்) நேரம் வந்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்.