இந்தி: பாலிவுட் வாய்ப்பை இழந்த தமிழ் நடிகை!

'மீசைய முறுக்கு' ஆத்மிகா, தனக்கு இந்தி தெரியாததால் பிரபல பாலிவுட் இயக்குநரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்தார். அரவிந்த் சாமி, ஸ்ரேயா ஆகியோர் நடித்துள்ள இந்த திரில்லர் பொருளாதார சிக்கலால் இன்னும் வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து, வைபவ் - வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு பெயரிடப்படாத படம் என வரிசையாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.



தனுஷ் நடித்த இந்திப் படமான ராஞ்சனா, மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய். பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் இவர், தமிழ் நடிகர்களை தன் படங்களில் தொடர்ந்து நடிக்க வைப்பவர். இந்நிலையில், ஆத்மிகாவுக்கு இவர் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டுமென்பதால் தன்னால் அதில் நடிக்க முடியவில்லை என வருத்தப்பட்டுள்ளார் ஆத்மிகா.

இது தொடர்பாக அவர் கூறும் போது, "முதலில் இதற்காக அதிகம் வருத்தப்பட்டேன். நான் பாலிவுட் படங்களின் ரசிகை. ஆனால் அந்த மொழியைக் கற்க முடியவில்லை. அதனால் இப்போது ஊரடங்கில் இந்தி கற்று வருகிறேன். நல்ல வாய்ப்புகளுக்காக நான் மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன். ஒரு வெற்றி கொடுத்துவிட்டு வரிசையாக நான்கு தோல்விப் படங்களைத் தருவது மோசமானது. அதனால் படங்கள் நடிக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை" என்று கூறியுள்ளார்.

வழக்கமாக தமிழ் தெரியாத இந்தி நடிகைகளாக இருந்தும் தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற்று முன்னணி நாயகிகளாக பலர் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு தமிழ்ப்பட நடிகை இந்தி தெரியாததால் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை கூறி வருகிறார்கள்.

-முகேஷ் சுப்ரமணியம்
Blogger இயக்குவது.