சென்னை குடிசை பகுதி மக்களுக்கு 50 லட்சம் மாஸ்க்குகள்

சென்னை குடிசை பகுதி மக்களுக்கு நாளை முதல் 50 லட்சம் மாஸ்க்குகள் வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்களால் மேற்கொள்ளப்படும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சர் வேலுமணி ஆலோசனை நடத்தினார்.



இதில், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் குடிநீர் குறித்தும், கூடுதலாக 1,000 தெருக்களுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறித்தும், நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதன்பின் சில அறிவிப்பு மற்றும் உத்தரவுகளை வெளியிட்டார் அமைச்சர் வேலுமணி.



சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு நாளை முதல் இலவச முகக்கவசங்கள் வழங்கப்படும். ஒருவருக்கு 2 முகக்கவசம் வீதம் மொத்தம் 52 லட்சம் முகக்கவசங்கள் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணியாளர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து கொரோனா பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வெளியே சென்று பணிபுரிய வேண்டியுள்ள நிலையில் வீடுகள் தோறும் சென்று பாதுகாப்புடன் பணிபுரிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாநகராட்சி பணியாளர்கள் அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் சூடான, விலையில்லா சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

படிப்படியாக அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள், குடிநீர் பணிகள், நீராதாரப் பணிகள் மற்றும் 100 நாள் வேலைவாய்ப்புப் பணிகள் தொடங்கிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் தினசரி காய்கறிச் சந்தைகள் மற்றும் தள்ளுவண்டிகளின் செயல்பாடுகளை இலகுரக வாகனங்களில் தெருக்களில் சென்று காய்கறிகளைப் பொதுமக்களுக்கு சமூக இடைவெளியுடன் விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்காணிப்பது அவசியமானது.

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் 3,28,834 களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவ போதிய சோப்புகள் வழங்கிட வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

-கவிபிரியா
Blogger இயக்குவது.