கோட்டாபயவின் கூற்றால் சர்வதேச அமைப்புக்கள் கடும் அதிருப்தி!!

இலங்கைப் படையினர் மீது சர்வசே நாடுகள் மற்றும் அமைப்புக்கள் மூலம் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமாகவிருந்தால் சர்வதேச கட்டமைப்புக்களிலிருந்து விலகுவதற்கு தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பில் சர்வதேச அமைப்புக்கள் பலவும் கடும் அதிருப்தியை கொண்டுள்ளன.

இலங்கையில் செயற்பட்டு வரும் சர்வதேச அமைப்புக்கள் தமது செயற்றிட்டங்கள் தொடர்பில் உள்ளக ரீதியிலும், சர்வதேச, பிராந்திய ரீதியிலும் கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றபோதே மேற்கண்டவாறு அதிருப்தியான பிரதிபலிப்புக்களைச் செய்துள்ளன.
கடந்த 19 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள தேசிய படைவீரர்கள் நினைவுத்தூபியில் நடைபெற்ற தேசிய படைவீரர்கள் தினத்தின் போது உரையாற்றிய ஜனாதிபதி , இலங்கைப் படையினர் 3தசாப்த போரை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தினை நிலை நாட்டியவர்கள் என்றும், அவ்வாறானவர்களுக்கு தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதை அனுமதிக்கப்போவதில்லை எனவும் கூறி இருந்தார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்ப், பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோரைப் போன்று படையினருக்கு அழுத்தமளிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியிருந்தார்.
அவ்வாறு தொடர்ச்சியான நிலைமையொன்று காணப்படுமாகவிருந்தால் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து விலகுவதற்கு தயங்கமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவின் இந்தக் கருத்து கடந்தவாரம் முழுவதும், வெளிநாடுகளின் தூதரகங்கள், சர்வதேச நாடுகளின் தலைநகரங்கள் ஆகியவற்றில் பேசுபொருளாகியிருந்தது.
அத்துடன் , சர்வதேச அமைப்புக்களும் இந்தவிடயத்தினைக் மிகுந்த கவனத்தில் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபயவால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பாரதூரமான கருத்தானது அரசாங்கத்தின் போக்கிலும், அணுகுமுறைகளிலும் எவ்வாறான நிலைமையைக் கொண்டிருக்கின்றது என்பதை கூர்ந்து கவனிப்பதற்கு அடித்தளமிட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனநாயகத்திற்கும் உலக வழக்கத்திற்கும் சவால்களை ஏற்படுத்தவல்ல இத்தகைய கருத்துக்கள் ஆழ்ந்த கவலையடைச் செய்திருப்பதாக சர்வதேச அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தக் கருத்துக்கள் தொடர் தேச்சியான செயற்பாட்டினை கொண்டிருக்கின்றதா இல்லை ஒரு நேர செயற்பாட்டினை வெளிப்படுத்துவதாக மையப்படுத்தியதாக காணப்படுகின்றதா என்பது தொடர்பில் துல்லியமான அவதானம் செலுத்தப்பட வேண்டிய நிலைக்குள் தம்மைத் தள்ளிவிட்டுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனைவிடவும், இக்கூற்று தேர்தலை மையப்படுத்தயதாக இருக்கின்றதா என்ற சந்தேகமும் அந்த அமைப்புக்களுக்குள் காணப்படுகின்றன.
மேலும் தற்போதைய கொரோனா வைரஸ் பரவலேற்படுவதற்கான நிலைமைகளைக் கொண்டுள்ள தற்போதைய அனர்த்தகால கட்டத்தில் கூட சமுக ஒருமைப்பாடு, ஒன்றிணைந்த தன்மை ஆகியன கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, அடுத்துவரும் காலப்பகுதியில் தமது இலங்கை அரசுடன் கூட்டிணைந்ததான செயற்றிட்டங்கள் மற்றும் இதர விடயங்கள் முறையாக முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்ற ஐயமான நிலைமை தோற்றம்பெற்றுள்ளதாகவும் உள்நாட்டில் சர்வதேச நியமங்கள் பேணிக்காக்கப்படுமா என்ற சந்தேகமும் வெகுவாக தலைதூக்கியுள்ளதாகவும் குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.