சபரிமலை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14ஆம் தேதி திறக்கப்படும். ஆனால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை’ என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. கோயில்களில் பூஜைகள் மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் பின்னர் ஜூன் 8ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கோயில்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.



இந்த நிலையில் மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோயில் நடை ஜூன் 14ஆம் தேதி திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது. மேலும், தினமும் காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்துக்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று (ஜூன் 11) தேவசம் போர்டு தலைவர் வாசு, தந்திரி மகேஸ் மோகனரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கோயில் நடைதிறப்பு, பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க கூடாது என தந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சுரேந்திரன், “மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை ஜூன் 14இல் திறக்கப்படுகிறது. 19ஆம் தேதி வரை மிதுன மாத பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கொரோனா பரவலாம் என்பதால் ஜூன் 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடக்கவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்படுகிறது” என்று அமைச்சர் சுரேந்திரன் கூறினார்.

-ராஜ்
Blogger இயக்குவது.