முழு ஊரடங்கு: வலுக்கும் கோரிக்கைகள்!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு கறாராக செயல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் முழு ஊரடங்கு பற்றி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வருவாய் பேரிடர் ஆணையரும் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை. முழு ஊரடங்கு என்ற தகவல்கள் வதந்தியே என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அரசு செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (ஜூன் 11) அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ உலகை உலுக்கி வரும் கொரோனா தொற்றின் தாக்கம் இப்போது நம் நாட்டில் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. குறிப்பாக ஜூன் மாதத்தில் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது தான் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.



ஊரடங்கை பேணுவதிலும், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் கொஞ்சம், கொஞ்சமாக அக்கறை இழக்கப்படுகிறதோ என்ற கவலை எல்லோருக்கும் உருவாகி வருகிறது. ஒருவரையொருவர் சுய கட்டுப்பாடுகளின் மூலம் காப்பாற்றிக் கொள்ள கூடிய நிலை உள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் இது குறித்து கூடுதல் பொறுப்புணர்வு காட்ட வேண்டிய தருணம் இது என்பதை வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு இவ்விஷயத்தில் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையில், கொரோனா சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்தது ஒரு வாரத்திற்கு முழுமையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும். அப்படி அறிவிப்பதற்கு முன்பாக 48 மணி நேர அவகாசத்தை மக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், அப்பகுதிகளில் வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டிருக்கிறார் தமிமுன் அன்சாரி.

-வேந்தன்
Blogger இயக்குவது.