பிரபாகரன் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை- நிஷாந்தன்!!

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக விடுதலைப் போராட்டமொன்றை முன்னெடுத்தாரே தவிர பயங்கரவாத செயற்பாடுகளை பிரபாகரன் முன்னெடுக்கவில்லையென தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைவர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.


தனிச் சிங்களவர்கள் 11 பேரைக் கொண்டு, ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட கிழக்கு  தொல்லியல் பாதுகாப்பு செயலணியில் ஒருவரான எல்லாவல மேத்தானந்த தேரர், தமிழர் வரலாறு பற்றியும் தமிழர்களின் விடுதலை போராட்டம் பற்றியும் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை, இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் எஸ்.நிஷாந்தன் மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையின் வட-கிழக்கு பிரதேசம் அன்று தொட்டு தமிழரின் பூர்வீக தாயகம் என்பது வரலாற்று உண்மை.

இதனை எவராலும் ஒருபோதும் மறுக்க முடியாது. ஆனால் இன்று பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழர் வரலாறுகளை மறைக்க நினைப்பது நியாயமற்றது.

அதாவது வடக்கு மற்றும் கிழக்கு தமிழரின் பூர்வீகம் என்பது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கோஷம் மாத்திரம் அல்ல அது ஒட்டு மொத்த தமிழர்களின் கோஷமாகும்.

தமிழர்களாகிய எங்களிடமிருந்து சிறிது சிறிதாக பலவழிகளாலும் கபளிகரம் செய்த போது அதை எதிர்த்தும், கண்டித்தும் பல தமிழர்களும் அரசியல்வாதிகளும்  அகிம்சை ரீதியாக வீதிகளில் இறங்கி போராடினார்கள்.

 ஆனால் பேரினவாதிகள் இதை எல்லாம் ஏற்க மறுத்து தங்களது அராஜகங்களை மேலும் அதிகரித்து கொண்டு சென்றதால்தான் மாற்றுவழியாக ஆயுத ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கு முற்பட்டார் பிரபாகரன்.

அவர் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.  மாறாக பேரினவாத சக்திகளிடம் இருந்து எம் மக்களையும், எம் உரிமைகளையும், எம் மண்ணையும் பாதுகாத்து மீட்டெடுக்கும் ஒரு உன்னதமான விடுதலைப் போராட்டத்தையே முன்னெடுத்தார்.

ஆகவே மேத்தானந்த தேரர், தமிழர்களின் வரலாறு தெரியாமல் தேவையின்றி உளருவதை நிறுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.