பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு 24 வயது இளைஞர் உயிரை மாய்த்த சோகம்!
புத்தளம் சாலியாவௌ பொலிஸ் பிரிவில் வீட்டில் தனது பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனவிரக்திக்கு உள்ளான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் (19) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாலியாவௌ இப்பலோகம, கும்புக்கல்ல பகுதியைச் சேர்ந்த விக்ரம முதியன்சலாகே திலின பெதும் பண்டார (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு துக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக,
புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.
சடலமாக மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் தனது பெற்றோருடன் வாக்குவாதப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும் காணாமல் போன குறித்த இளைஞனைத் தேடியுள்ளனர்.
இந்நிலையில், சனிக்கிழமை (19) இளைஞனின் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள விளாம்பழ மரத்தில்,
கயிறு ஒன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சாலியாவௌ பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிஸாருடன் இணைந்து புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணையையும் நடத்தினார்.
கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமையினால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
கருத்துகள் இல்லை