வெடிபொருட்களை பதுக்குவதற்காக அல்கொய்தா பாதாள அறை திடுக்கிடும் தகவல்கள்...

 


டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் முக்கிய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்கவும், இலக்கு வைக்கப்பட்ட கொலைகளை அரங்கேற்றவும் அல்கொய்தா பயங்கரவாதிகள் சதிசெய்து வருவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) உளவுத்தகவல்கள் கிடைத்தன.


அதன் அடிப்படையில் 18-ந் தேதி இரவு தொடங்கி 19-ந் தேதி காலை வரையில் கேரளாவில் எர்ணாகுளத்திலும், மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர்.



இதில் எர்ணாகுளத்தில் 3 பயங்கரவாதிகளும், முர்ஷிதாபாத்தில் 6 பயங்கரவாதிகளும் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், பணம், செல்போன் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.



முர்ஷிதாபாத்தில் கைது செய்யப்பட்ட நஜ்மஸ் சாகிப், அபு சுபியன் முல்லா, மைனுல் மொண்டல், லியு யீன் அகமது, அல் மாமுன் கமால், அதிதுர் ரகுமான் ஆகிய 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், கொல்கத்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 24-ந் தேதி வரை என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



இந்தநிலையில், கைது செய்யப்பட்ட அபு சுபியன் முல்லாவின் முர்ஷிதாபாத் ராணி நகர் வீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாதாள அறையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த பாதாள அறை, பல டன் அளவு வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் பதுக்கி வைப்பதற்காக கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.



அபி சுபியன் முல்லா, வெள்ளிக்கிழமை இரவு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுற்றுச்சுவர் ஏறி குதித்து அவரை மடக்கி பிடித்து கைது செய்ததாக இப்போது தெரிய வந்துள்ளது.



மற்றொரு பயங்கரவாதியான நஜ்மஸ் சாகிப், முர்ஷிதாபாத்தின் டோம்கால் பகுதியை சேர்ந்தவர். அவர் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் அறிவியல் மாணவர். அவருக்கும் காஷ்மீரில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. அவர்களுடன் அவர் செல்போன் வழியாக உரையாடல்கள் நடத்தியதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்து, அவர் காஷ்மீரில் தொடர்பு கொண்டு பேசிய எண்கள், நபர்கள், பேசியதின் பின்னணி விசாரிக்கப்படுகிறது.



இன்னொரு பயங்கரவாதியான அல் மாமுன் கமால், ஒரு மதப்பள்ளிக்கூடத்தை நடத்தி வந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதில் உள்ள மாணவர்களை அவர் பயங்கரவாத ஆட்சேர்ப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைக்க பயன்படுத்தி வந்துள்ளார்.



கைது செய்யப்பட்ட 6 பயங்கரவாதிகளில் 4 பேரது வங்கி கணக்குகளில் சமீபத்தில் பெரிய தொகை பரிமாற்றங்கள் நடந்திருப்பதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.



கொல்கத்தாவில் நேற்று போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சில மறைவிடங்களை சோதனையிட்டு, 6 பேரை கைது செய்து, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.



இதற்கிடையே எர்ணாகுளத்தில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் கொச்சி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதியிடம், “பயங்கரவாத கும்பலில் 10 உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த சதி செய்துள்ளனர். அடையாளம் காணப்படாத இன்னும் பல பயங்கரவாதிகள் உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டது.



அதைத்தொடர்ந்து 3 பயங்கரவாதிகளையும் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்களில் 2 பேரை விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் டெல்லி கொண்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.