வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து ஒருவர் தப்பிஓட்டம்!!

 


வவுனியா- பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, தப்பி சென்றுள்ளதாக இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து விஷேட விமானத்தில் அழைத்து வரப்பட்டிருந்த 36வயதுடய சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித்தறுவான் குணவர்த்தன என்ற நபரே இவ்வாறு தப்பி சென்றுள்ளதாக பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தில் அழைத்து வரப்பட்ட பயணிகள் கொரோனா நோய் தொற்று பரிசோதனைகளுக்காக பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே குறித்த நபர் அங்கிருந்து நேற்று இரவு தப்பி ஓடியுள்ளதாகவும் குறித்த நபரை கைது செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபரின் பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெரியகாடு இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இருவருக்கு கடந்த வாரம் கொரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.