மட்டக்களப்பில் 212 கொரோனா நோயாளிகள் அனுமதி!


 மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று  நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கு வைத்தியசாலைகளாக கரடியானாறு, காத்தான்குடி வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், காத்தான்குடி வைத்தியசாலையில் 170 பேரும் கரடியனாறு வைத்தியசாலையில் 42 பேருமாக 212 பேர் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் இன்று வியாழைக்கிழமை தெரிவித்தார்.

வைத்தியர் ஏ.லதாகரன்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை காரணமாக தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்தற்கான வைத்தியசாலை மேலும் தேவைப்படுகின்றது.

இதற்கமைய சுகாதார அமைச்சு மாவட்டம் தோறும் ஒவ்வொரு வைத்தியசாலைகளை பயன்படுத்துவதற்கான திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம்பற்று வைத்தியசாலையும், மட்டக்களப்பில் கரடியனாறு வைத்தியசாலையும். அம்பாறையில் பாலமுனை, தமனை உட்பட 4 வைத்தியசாலைகள் கொரோன தொற்றுக்கான சிகிச்சையளிக்கும் புதிய வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்து பணிப்புரை வழங்கி அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் புனர்நிர்மாண வேலைகள் இடம் பெற்றுவருவதுடன் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்ட காத்தான்குடி வைத்தியசாலையில் இதுவரை 170 பேர் சிகிச்சை பெற்றுவருவதுடன் கரடியனாறு வைத்தியசாலையில் பேலியகொடை மீன்சந்தையில் அடையாளம் காணப்பட்ட 42 பேர்  உட்பட 212 பேர் நேற்று இரவுவரை சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பேலியகொடை மீன்சந்தை பகுதிக்குச் சென்ற கல்முனை மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த மீன் வியாபாரிகளை அடையாளம் காணப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பேலியகொட மீன்சந்தை பகுதிக்கு சென்றவர்கள் யாராவது இருப்பின் அவர்கள் தொடர்பாக பொது சுகாதார பிரிவு , பொலிசார் போன்றவைகளுக்கு தகவல்களை வழங்குமாறு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.