திருமலை துறைமுகத்தி​ல் காவியமான லெப்.கேணல் றெஜி உட்பட்ட 6 கடற்கரும்பு​லிகளின் நினைவு நாள்!📷

 திருகோணமலை துறைமுகத்தில் வைத்து மூன்று சிறிலங்கா கடற்படைக் கலங்களை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி உட்பட்ட ஆறு கடற்கரும்புலிகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

23.10.2000 அன்று திருகோணமலை துறைமுகத்தின் மீது கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா கடற்படை பாரிய அழிவுகளை எதிர்கொண்டது.
மார்பிள் பீச் பகுதியிலிருந்து துறைமுகத்தினை நோக்கி கடுமையான மோட்டார் தாக்குதல் நடாத்தப்பட துறைமுகத்திற்குள் உள்நுழைந்த கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும் சிறிலங்கா கடற்படையுடன் கடுமையாகச் சமரிட்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர்.

இதன்போது சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம் (படைக்காவி), போர்ப்படகு உட்பட மூன்று கடற்படைக் கலங்கள் கடற்கரும்புலிகளால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டன. மேலும் இரு போக்குவரத்துக் கப்பல்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன.

மார்பிள் பீச் பகுதியிலிருந்து துறைமுகம் மீது எறிகணை வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டிருந்த சிறிலங்கா வான்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த வெற்றிகரத் தாக்குதல் நடவடிக்கையின்போது ஆறு கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

கடற்கரும்புலி லெப்.கேணல் றெஜி (இளங்கோ) (மாணிக்கம் றமேஸ் - அக்கரைப்பற்று, அம்பாறை)

கடற்கரும்புலி மேஜர் றோஸ்மன் (கணேஸ்) (தேவராசா ரவீந்திரராசா - நிலாவெளி, திருகோணமலை)

கடற்கரும்புலி மேஜர் நிதர்சன் (தியாகராஜா தியாகேந்திரன் - கள்ளப்பாடு, முல்லைத்தீவு)

கடற்கரும்புலி மேஜர் நித்தி (சோழவேங்கை) (இராசையா ஜெகன் - பூந்தோட்டம், வவுனியா)

கடற்கரும்புலி மேஜர் மயூரன் (கநதசாமி பிரகாஸ் - சுண்ணாகம், யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் திருமாறன் (திருவாளவன்) (ஜெயம் நிசாதரன் - ஆவரங்கால், யாழ்ப்பாணம்)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.