அவசரநிலையை கண்டித்து எதிர்ப்பாளர்கள் போராட்டம்!

 


தாய்லாந்தில் அவசரநிலையை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பேங்கொக்கில் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய பேங்கொக்கில் நேற்று (வியாழக்கிழமை) பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவின் அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த 10,000 போராட்டக்காரர்களை கலகபிரிவு பொலிஸார் கலைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரிய அளவிலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், முக்கிய போராட்ட தலைவர்களான அனோன் நம்பா, மாணவர் ஆர்வலர் பரித் சிவாரக், பானுசயா சிதிஜிராவட்டனகுல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொள்வதாக அர்னான் கூறினார். அதே நேரத்தில் போராட்டக்காரர்களை தொடர்ந்து போராடுமாறு வலியுறுத்தினார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை எச்சரிக்க நான் விரும்புகிறேன், இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பது எதிர்காலத்தில் உங்களை பாதிக்கும் என பெங்கொக் பொலிஸ்துறையின் துணைத் தலைவர் பியா தவிச்சாய் கூறினார்.

போராட்டக்காரர்கள் அனைவர் மீதும் வழக்குத் தொடரபடும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கைதிகளின் உரிமைகளை மதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தாய்லாந்தை வலியுறுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் 2014ஆம் ஆண்டு இராணுவ தளபதியாக இருந்த பிரயுத் சான் ஓச்சா, புரட்சி நடத்தி ஆட்சியை கவிழ்த்தார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். கடந்த ஆண்டு நடந்த சர்ச்சைக்குரிய தேர்தலுக்கு பின்னர் அவர், அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார்.

ஆனால் அவருக்கு எதிராக மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் பெரும் சக்தியாக உருவெடுத்தது.

பிரதமர் ஓச்சா பதவி விலக வேண்டும், புதிய அரசியல் சாசன சட்டம் இயற்றப்படவேண்டும், முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.