இளம் பெண்கள் பலரிடம் பணம் நகை சுருட்டிய இளைஞன்!

 தமிழகத்தில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை குறி இளம் பெண்கள் பலரிடம் நகை மோசடி செய்து வந்த வங்கி ஊழியரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மஞ்சூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ். 30 வயது மதிக்கத்தக்க இவர் திருவண்ணாமலையில் இருக்கும் தனியார் வங்கியில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் இணையத்தில் தனக்கு மணமகள் தேவை என்று திருமண தகவல் மைத்தில் பதிவு செய்துள்ளார். அதன் படி இதைக் கண்ட திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் போன்றோர் அவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதை கார்த்திக் ராஜ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு திருமண ஆசைக்காட்டி தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

அப்படி தான் கோயமுத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த பெண்ணைப் பார்ப்பதற்காக, திருவண்ணாமலையில் இருந்து கோயமுத்தூர் வந்த கார்த்திக் ராஜ், குறித்த பெண்ணிடம் 7 பவுன் நகையை அவசர சூழ்நிலைக்காக வாங்கிச் சென்றுள்ளார்.

ஆனால், அதன் பின் அதை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அப்பெண் உடனடியாக அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போது, திருவண்ணாமலைக்கு சென்று கார்த்திக் ராஜை பிடித்து விசாரணை நடத்திய போது, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் உள்பட பல பெண்களிடம் திருமண ஆசைவார்த்தை கூறி நகைகளை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கார்த்திக் சினிமா பாணியில் பெண்களிடம் நடித்து, திருமணம் ஆசை காட்டி, அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல பெண்களிடம் பழகி உள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தனது இந்த மோசடி விளையாட்டை தொடங்கி இருக்கிறார். தனக்கு தொடர்பு கொண்டு பேசும் பெண்களிடம், எனக்கு வங்கியில் பணம் வர வேண்டி உள்ளது, ஆனால் அது வர சிறிது வாரங்கள் ஆகும்.

ஆனால் எனக்கு கடன் பிரச்சினை உள்ளதால், நகையை கொடுங்கள், அதை நான் அடமானம் வைத்து கடனை கொடுத்து விடுகிறேன்.

வங்கியில் இருந்து பணம் வந்ததும், நகையை மீட்டு உங்களிடம் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று கூறி கோயமுத்தூரைச் சேர்ந்த 3 இளம்பெண்கள், பொள்ளாச்சி, ஈரோடு, ராஜபாளையம், சிவகாசி, பெரம்பூர், பெங்களூரு உள்பட பல இளம் பெண்கள், விதவைகள் என்று பலரிடம் 50 பவுன் நகையை வாங்கி மோசடி செய்து உள்ளான்.

இவர் மோசடி செய்த நகையை அடகு வைக்கவும், விற்பனை செய்யவும் இவரது நண்பர் பிரசாந்த் என்பவர் கூட்டாளியாக செயல்பட்டுள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்கள் 2 பேரிடம் இருந்தும் தற்போது 13 பவுன் நகை மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.