தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் பரீட்சை மண்டபங்கள் : கல்வி அமைச்சர்
திட்டமிடப்பட்டுள்ளவாறு ஐந்தாம் தர புலமைப்பரிசல் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும், கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை திங்கட்கிழமையும் இடம்பெறும். சுகாதார பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் பரீட்சைகளை பிற்போட வேண்டிய தேவை ஏற்படவில்லை.
கம்பஹா மாவட்டத்தில் விசேட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஆகவே மாணவர்கள் எக்காரணிகளுக்காகவும் அச்சம் கொள்ள தேவையில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீறிஷ் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உரிய நேரத்தில் இடம் பெற வேண்டிய இவ்விரு பிரதான பரீட்சைகளும் உரிய காலத்தில் இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை தற்போது எவ்வித பாதிப்பை ஏற்படுத்தாவிடினும். மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நெருக்கடியான சூழ்நிலையில் தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
கொவிட்- 19 வைரஸ் தாக்கத்திற்கு மருந்து இதுவரையில் கண்டுப்பிடிக்கவில்லை. இந்த வைரஸ் தாக்கத்துடன் மனித குலம் ; வாழப்பழகிக்க கொள்ள வேண்டும் . என உலக சுகாதார தாபனம் குறிப்பிட்டுள்ளது. கொவிட்.-19 வைரஸ் தாக்கத்தை இலங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடையும் வீதம் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் காணப்பட்டது.
எவரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் கொவிட்-19 வைரஸ் பரவல் மீண்டும் 3 ஆம் அலையாக சமூக மட்டத்தி;ல் இருந்து பரவலடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இரண்டு பிரதான பரீட்சைகளும் மீண்டும் பிற்போடப்படுமா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சுகாதார தரப்பு, இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட துறைசார் நிபுணர்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. திட்டமிட்டதன் பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 5 ஆம் தர புலமைப்பரீட்சையினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாடு தழுவிய ரீதியில் உள்ள 2936 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரீட்சை நடத்தப்படும். இம்முறை 3 இலட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிகமான பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள்.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் திட்டமிட்டபடி நாடுதழுவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்தப்படும். இம்முறை பரீட்சைக்கு 3 இலட்சத்து 62ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றுகிறார்கள்.
சுகாதார பாதுகாப்பு அம்சங்கள்.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த சுகாதாரஅமைச்சு முழுமையான நடவடிக்கைகளை முன் னெடுத்துள்ளது. ஒவ்வொரு பரீட்சை மத்திய நிலையங்களிலும், வழமைக்கு மாறாக பாதுகாப்பு மற்றும், சுகாதார தரப்பினர் சேவையில் ஈடுப்படுத்தப்படுவார்கள். பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளை விரைவாக ஒன்றுப்படுத்த விசேட நடவடிக்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட பரீட்சாத்திகள்.
சுகாதார பாதுகாப்பு அம்சங்களில் கம்பஹா மாவட்ட பரீட்சாத்திகளுக்கு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் குறித்த பாடசாலை ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்திற்குள் உள்வரும் மற்றும் அம்மாவட்டத்தில் இருந்து வெளியேறும் பரீட்சாத்திகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த போக்குவரத்து வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் முகாம்களில் பரீட்சை மண்டபம்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பெரும்பாலானோர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களின் பெரும்பாலான மாணவர்கள் இ.ம்முறை புலமைப்பரீட்சை மற்றும். உயர்தர பரீட்சைகளை தோற்றவுள்ளார்கள். இவர்கள் தங்கியிருக்கும் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து பரீட்சைக்கு தோற்றுவதற்கான நடவடிக்கைகள் பரீட்சைகள் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பாடசாலை அதிபர்கள் திணைக்களத்தின் ஊடாக தொடர்புப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அரசாங்கம் விதித்துள்ள சுகாதார பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக உயர்தர மாணவர்களுக்கு அதிகளவில் பொறுப்பு உண்டு, 5 ஆம் தர புலமைப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். உயர்தரப மாணவர்கள் பரீட்சை முடிந்தவுடன் ஒன்று கூடுதல், நகரில் சுற்றி நண்பர்களுடன் சுற்றி திரிதல் ஆகியவற்றை தவிர்த்து , பாதுகாப்பான முறையில் பரீட்சையினை நடத்தி முடிக்க அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை