இயக்கச்சி விவசாயிகளின் கைது: கண்டிக்கப்பட வேண்டியதொன்று !
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஈஸ்வரபாதம் சரவணபவன் அறிக்கை
அண்மையில் இயக்கச்சி கோவில் வயல் பகுதியில் தமது வயல்நிலங்களை விதைப்பு நடவடிக்கைகளுக்காகத் தயார்படுத்திக் கொண்டிருந்த 12 விவசாயிகளைச் சுண்டிக்குளம் வனவள திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கைது செய்ததுடன் அவர்களின் விவசாய உபகரணங்களையும் கைப்பற்றியமைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இயக்கச்சி கோவில் வயல் பகுதியில் தமது வயல்நிலங்களை விதைப்பு நடவடிக்கைகளுக்காகத் தயார்படுத்திக் கொண்டிருந்த 12 விவசாயிகளைச் சுண்டிக்குளம் வனவள திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் எவ்வித நியாயபூர்வமான காரணங்களும் இல்லாமல் கைது செய்தமை கண்டனத்துக்கு உரியது.
அவர்களை விடுவிக்கும்படி கோரி அவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் வனவள திணைக்கள வாசலில் கூடிக் கோரிக்கை விடுத்தபோது அங்கிருந்த அதிகாரிகள் விவசாயிகளை விடுவிக்க மறுத்துவிட்டனர். எனினும் மக்களின் கோரிக்கை வலுப்பெறவே அன்று மாலை விவசாயிகள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மறுநாள் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது மன்றில் அவர்களின் காணி உரிமைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பிரதேசத்தின் நிர்வாக மேலாளரால் காணி ஆணையாளர் திணைக்களத்தின் அங்கீகாரத்துக்கு அமைய வழங்கப்பட்ட காணிகளை வனவளத்திணைக்களம் உரிமை கொண்டாடி பிரதேச செயலாளரின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு இந்தநாட்டின் சட்ட ஒழுங்கு இனவாதமயப்படுத்தப்பட்டு சீர்குலைக்கப்படுகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒருபுறம் உள்ளூர் விவசாய உற்பத்திகளையும் கடலுணவு உற்பத்திகளையும் பெருக்கி வெளிநாட்டு இறக்குமதியில் நாடு உணவுக்குத் தங்கியிருக்கும் நிலைமையை இல்லாமல் செய்யப்போவதாக ஜனாதிபதியும் பிரதமரும் பெரும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்குச் சொந்தமான விவசாய உற்பத்தி நிலங்களையும் மீன்பிடி மையங்களையும், விவசாயக் குளங்களையும் இனவாத நோக்குடன் அரச திணைக்களங்கள் ஆக்கிரமிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க முடியுமா?
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகி அமைச்சராகவும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்களாகவும் பதவிபெற்ற தமிழ் அரசியல்வாதிகளின் கண்களில் இத்தகைய அநீதிகள் படுவதில்லையா? அல்லது இத்தகைய அநீதிகளுக்கு அவர்களும் தங்கள் மறைமுக ஆதரவை வழங்குகின்றனரா? கோவில்வயல் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி அது ஒரு தனிச்சம்பவம் மட்டுமல்ல அது தமிழ் மக்கள் மீதான நில அபகரிப்பு ஒடுக்குமுறை நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதி – என்றுள்ளது.
கருத்துகள் இல்லை