அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளன – வணிகர் சங்கம்

 “யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருள்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” என்று யாழ்ப்பாண்ம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் தெரிவிக்கையில்,

“நாட்டில் தற்போது காெரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறியுள்ள நிலையில் மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். அது மட்டுமன்றி சமூகத் தொற்று காரணமாக நாடு முடக்கப்படும் என்ற சந்தேகத்தினால் அத்தியாவசியப் பொருட்களை அதிகளவாக கொள்வனவு செய்கின்ற நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று. யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தற்போதைய சூழலில் தேவையான அளவு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கையிலிருப்பில் உள்ளன. அது மட்டுமன்றி கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றன.

ஆகையால் தேவையற்ற முறையில் பொருள்களை கொள்வனவு செய்து தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்.

ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கும் திட்டத்துக்கும் வர்த்தகர்கள் தயாராகவே உள்ளனர்.” – என்றார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.