7 ஆம் திகதிக்குப் பின் யாழ்ப்பாணத்திற்கு வந்தவரா நீங்கள்!

 



வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இருந்து நவம்பர் 7 ஆம் திகதிக்குப் பின் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர்கள் அனைவரும் தத்தமது பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரியிடம் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த 7ஆம் திகதிக்குப் பின்னர் வருகை தந்தோரை வீட்டில் சுயதனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவது தொடர்பான முடிவுகளை அவர்கள் இருந்து வந்த பிரதேசங்களின் நோய் நிலைமைகளின் அபாயங்களைப் பொறுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் தீர்மானிப்பர்.

இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடக்கு மாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசரஅழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறியத்தர வேண்டும்.

இதன் மூலம் தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்கமுடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.