யாழ்.தீவகத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை!

 


யாழ்ப்பாணம் தீவகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மாவீரர் நினைவேந்தலை  ஒன்றுகூடி நடத்த ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுத் தாக்கல் மற்றும் கொவிட்- 19 தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றுக்கு அமைய நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன், அவரது சகோதரர் குணாளன் கருணாகரன், முத்தையாபிள்ளை தம்பிராசா, ரமேஷ், கனகையா மற்றும் மதுஷ் ஆகிய 6 பேரைக் குறிப்பிட்டு இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லையைத் தடுப்பதற்கும் கொவிட் -19 தொற்று நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் தனிமைப்படுத்தல் பிரிவின் கீழும் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் நேற்று நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், வேலணை மற்றும் புங்குடுதீவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் உள்ளன என்று தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். அத்துடன், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை.

இதனால் பொலிஸாரின் மனுவை ஆராய்ந்த ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் கொவிட் -19 நோய்த் தொற்று கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.