tiktok – பலரையும் ஆபத்தான வலையில் விழவைக்கும் ரகஸியம் என்ன?


 தொழில் நுட்பத்தின் வளர்ச்சியென்பது சில நேரங்களில் மனிதகுலத்தின் வீழ்ச்சியாகவும் அமைந்துவிடுகின்றது. விஞ்ஞானம் வளர்ந்துவிட உலகமே நம் கையில் செல்போன் மூலமாக …! Android மொபைல் மூலம் பல நன்மைகள் கிட்டினாலும் அதிலுள்ள tiktok செயலிமூலம் நாம் அடைந்துக்கொண்டிருக்கும் வீழ்ச்சிபற்றியே இன்று நாம் பார்க்கப்போகின்றோம்.

கையில் ஒரு android phone இருந்தால்போதும் நீங்களும் ஓர் சிறந்த நடிக / நடிகையர்தான். உங்களை ரசித்து நூற்றுக்கணக்கான விசிறிகள் பின்தொடர்வார்கள், என்ற மோகம்தான் “tiktok application” பலரையும் தன் வலையில் சிக்கவைத்துள்ளமையின் ரகசியம் .

2014 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த,”Alex zhu” என்பவரால் கல்வி நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டு பயங்கர தோல்வியை சந்தித்து ,பின் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட musically aap என மாற்றம்பெற்று இறுதியில் அதன் update Version ஆக bytedance நிறுவனத்தின்கீழ் இருப்பதுதான் tiktok! 2019ஆண்டு உலகிலேயே அதிகமாக download செய்யப்பட்ட app. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் app!

இலவசமாக ஒரு application! இந்த appஇனை எப்படி வேண்டுமென்றாலும் , எப்போது வேண்டுமானாலும் , யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். யாரும் எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள் . படம் பார்ப்பதுபோல் , விளையாடுவதுபோல் பொழுதுபோக்கிற்காக இருக்கும் பலவற்றுள், இதுவும் ஓர் தேர்வு இன்றைய காலகட்டத்தில் என நாம் நினைத்துக்கொண்டிருக்கலாம் . அந்த நினைப்பில் தவறில்லைதான். ஆனால் இந்த application ஐ எதற்காக நமக்கு இலவசமாக கொடுக்கவேண்டும்?

இலவசமாக கொடுக்கப்படும் இந்த applicationஐ பொழுதுபோக்கிற்காக நாம் பயன்படுத்துவதால் யாருக்கு என்ன லாபம் ? நம்முடைய வீடியோக்கள் மூலம் யாரெல்லாம் வருமானம் பார்க்கிறார்கள் ? என்ற பல கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் … நாளொன்றில் பதினையாயிரம் கோடிக்குமேல் பயனாளர்கள் tiktok இனை பயன்படுத்துத்துகிறார்கள் என கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் பலகோடிரூபாய்களை வருமானமாக ஈட்டுகின்றது . ஆனால் , நாம் இலவசமாகத்தானே இந்த tiktokஐ பயன்படுத்துகின்றோம் ? இது எப்படி சாத்தியம் ?

தற்போதுள்ள “அமைப்பு” எப்படி இருக்கிறதென்றால் யாராவது அவர்களாகவே வந்து வலையில் வீழ்ந்தால் “அவர்களாகத்தானே வந்து வலையில் வீழ்ந்தார்கள் இதை வைத்து நான் பணம் பண்ணகூடாதா? என்ற எண்ணம் கொண்டவர்களை அதிகமாக கொண்ட சமூகமாகவே இன்றைய சமூகம் மாறிக்கொண்டிருக்கிறதென்றால் அது மிகையில்லை . என்னை நம்பி இவ்வளவு Dataவை கொடுத்திருக்கிறார்கள் இதை நான் பத்திரமாக வைத்திருக்கவேண்டும் என யாரும் நினைக்கப்போவதில்லை . இவற்றை நிச்சயம் அவர்கள் விலைக்கு கொடுக்கத்தான் போகிறார்கள் . இது விலைக்குப்போகிற விஷயம் , நம்முடைய dataவை இன்னொருவர் பயன்படுத்திக்கொள்கின்ற datamining என்றவோர் industry இருப்பதே இன்றுவரை நம்மில் பலருக்கு தெரியாமலே இருந்துவருகின்றது .

நம்முடைய personalityஐ அவர்கள் study பண்ணி நமக்கென்று தனியாக ஒரு விளம்பரத்தினை கொடுக்கின்றார்கள் (உதாரணமாக நமக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் அல்லது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் நம் தகவல்கள் விற்கப்படும்). நம்முடைய likes ஒவ்வொன்றையும் அவதானித்து ஒரு தேர்தலையே இவர்களால் மாற்றமுடியும் என்கிற தகவல் இன்றைய தலைமுறையினரில் எத்தனைபேர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது ?

Data என்பது மிகப்பெரிய பொக்கிஷம் , அதுவோர் மூலப்பொருள் என்பது இனிமேல்தான் பலருக்கும் புரியப்போகிறது . என்னுடைய data வை வைத்துக்கொண்டு நீ என்ன செய்கிறாய் என கேற்கப்போகும் காலம் இனிவரும் . ஒருவருக்கு அதிகமான likes , comments வருகிறதென்றால் அதுவொரு data.அதை Trace செய்து வெளிநாடுகளுக்கும் , தனியார் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்று பணம் பண்ணுகின்றார்கள் . விலைகுவாங்குபவர்கள் எந்தமாதிரியான ஆளை எப்படி அணுகவேண்டும் , இந்த தலைமுறைகு என்ன கொடுக்கவேண்டும் , என்ன கொடுக்கக்கூடாது என தீர்மானிக்கின்றார்கள் .

இவர்கள் செய்வதென்ன ?

மக்களுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய , ஏதோ ஒருவகையில் அன்றாடம் அவசியப்படக்கூடிய ஒரு application ஐ உருவாக்குகின்றார்கள் . அதை இலவசமாகவும் கொடுத்துவிடுகின்றார்கள் . நம்முடைய சவுகர்யத்திற்காக நாமும் அதை பயன்படுத்திக்கொள்கின்றோம் .

இதனால் அந்த app கேற்கும் நம்மைப்பற்றிய தகவல்கள் பலவற்றையும் skip பண்ணாமல் வழங்கிவிடுகின்றோம் . இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு இறுதியில் ,”I agree” என்ற buttonஐயும் click செய்துவிடுகின்றோம். அந்த I agree என்ற ஒன்றிற்குமுன் என்னவெல்லாம் எழுதியிருக்கின்றது என்பதை யாரும் படித்துப்பார்ப்பதில்லை . பெரும்பாலும் அது ஆங்கிலத்தில் இருக்கும் , பக்கம்பக்கமாக இருக்கும் என்பதற்காகவே யாரும் படிப்பதில்லை . ஆனால் அங்கேதான் அவர்கள் மிகவும் தெளிவாக சொல்லியிருப்பார்கள் , “இந்த தகவல்களை தேவைப்பட்டால் நாங்கள் யாருடனும் share பண்ணுவோம் . இது எங்களுடைய “copyright”இல் உள்ளடங்கும் , இதில் உங்களுக்கு சம்பந்தமில்லை ” என சொல்லிவிடுகின்றனர் . ட்ரில்லியன் மக்களுடைய தகவல்கள் எங்கே போகின்றது , என்ன ஆகின்றது என தனிப்பட்ட ஒருவரால் நிர்ணயிக்க முடியாது அல்லவா ? ஆனால் அந்த வேலையினை datamining என்ற industry செய்துமுடித்துவிடும் . அப்படியானால் இந்த dataவையெல்லாம் சேகரிப்பது யார் ?

வேறு யார் , அமெரிக்காவும் , சீனாவும் தான் ! ஆக , இனிமேல் நடக்கபோகின்ற யுத்தங்கள் அணு ஆயுதங்களை வைத்து அல்ல , Dataவை வைத்துதான் யுத்தங்கள் நிகழப்போகின்றன . அந்த காலகட்டத்துக்குள் காலடி எடுத்துவைத்துவிட்டோம் . ஆனால் நாம் அதற்குள் பயணித்துக்கொண்டிருப்பதனை புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் நம் அறியாமை .

வெறும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் tiktok தற்போது எல்லைமீறி போய்க்கொண்டிருப்பதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன . Technical security என்பது இந்த appல் இல்லவேயில்லை எனலாம் . இதில் ஏதேனும் பிழைத்துவிட்டால் சட்டரீதியில் அனுகவியலாது . Tiktokஐ பொறுத்தவரையில் அதிர்ச்சிதறக்கூடிய விடயம் என்னவென்றால் , வேறு எந்தவொரு சமூகவலைத்தளத்திலும் இல்லாத அளவு நம்முடைய பெயர் , பால் , வயது உற்பட credit cardதகவல்கள் , நாம் பயன்படுத்தும் மற்றைய சமூகவலைத்தள login தகவல்கள் , வங்கிக்கணக்கு விபரங்கள் என ஒட்டுமொத்த தகவல்களையும் வழங்கிவிட்டே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம் .

மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் , பொதுவான விதிகள்தான் அனைவர்க்கும் பொருந்தும் என சொல்லப்பட்டாலும் , personality disorder, (ஆளுமைக் கோளாறுகள் ) என சிலர் உண்டு . எல்லோரும் நம்மைக் கவனிக்கவேண்டும் , பிரபலம் என்ற வெளிச்சம் நம்மீது விழுந்து கொண்டேயிருக்கவேண்டும் என இவர்கள் நினைப்பர் .

மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கச் செய்வதென்பது இவர்களுக்கு மிகப்பெரிய போதை போன்றது . இவ்வாறான personality disorder இருப்பவர்களை மருத்துவத் துறையில் histrianic personality disorder , narcissistic personality disorder அல்லது borderline personality disorder எனக்கூறுவர். இவ்வாறானவர்களின் பொதுத்தன்மை என்னவென்றால் தம்மை ஓர் மிகப்பெரிய பிரபலமாக எண்ணிக்கொண்டு , தம்மை எல்லோரும் முக்கியமானவராக நினைக்கவேண்டும், தம்மீதான வெளிச்சவட்டம் எப்போதுமே தொடரவேண்டும் என நினைக்கும் இவர்கள், அதற்காக எந்தவோர் எல்லைக்கும் செல்லத்துணிவர் (attention seeking). அதிலொன்றுதான் tiktok இல் அதிகூடிய கவர்ச்சி காட்டுதல், குழந்தைத்தனமாக பேசுவது, சாதிப் பெருமையடிப்பது போன்ற அறிகுறிகள்.

இவ்வாறான மனிதர்கள் எல்லா காலங்களிலுமே தம்மை மிகையாக காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள். இந்த மாதிரியான மனோநிலை கொண்டோரிடம் tiktok போன்றதோர் application கிடைத்துவிட்டால் அவர்கள் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். திரும்பத் திரும்ப vedio upload செய்வது, வேறுவேறு angles ல் தம்மைத்தாமே photo எடுத்து பதிவுசெய்துவிட்டு likesகாக காத்துக்கொண்டிருப்பது என personality disorder இருப்பவர்கள் tiktok ஐ மிகையாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த பிரச்சினை காலப்போக்கில் என்னவாகுமென்றால் , சாதாரணமான மனநிலை கொண்டவொருவரைக்கூட, “இவர்களுக்கு இத்தனை likes, following கிடைக்கிறது நமக்கு கிடைக்கவில்லையே , நாமும் அவர்களைபோலவே எல்லைமீறி ஏதேனும் செய்தால் என்ன?” என்ற போட்டி மனோநிலையினை ஏற்படுத்திவிடக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கிவிடுகின்றது . இது ஒருவகையான நோய், யதார்த்தமோ ஆரோக்யமானதோ அல்ல.

வாழ்க்கையில் மிகவும் பிசியாக இருப்பவர்கள், முக்கிய குறிக்கோள்களைக் கொண்டவர்கள் யாரும் இதுபோன்ற appகளை மெனக்கெட்டு உற்காந்து பார்த்துக்கொண்டிருப்பதில்லை, வாழ்க்கையில் அவ்வளவாய் மும்முரமில்லாத வேலைவெட்டி ஏதுமில்லாமல் பொழுது போக்கிற்கு ஏதேனும் கிடைக்காத என்றிருப்போர் இந்த tiktok app இல் சிக்கிக்கொள்கின்றனர் என்றே கூறவேண்டும்.

சமூக வலைத்தளங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. இனி அதை நம்மிலிருந்து யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் பிரித்தெடுக்கவியலாது. ஆகவே எந்தவொரு application ஐயும் நாம் பயன்படுத்தலாம் ஆனால் அடிமையாகிவிடக்கூடாது. இன்றைய டிஜிட்டல் உலகில் இதையெல்லாம் நான் தொடவே மாட்டேன் என சொல்லிக்கொண்டிருப்போமாயின் நாம் update இல்லாதவர்களாகிவிடுவோம். எனவே இவற்றை பாதுகாப்பாக பயன்படுத்த அறிந்திருக்கவேண்டும் என்பதோடு, இதிலுள்ள குறைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தத் தெரிந்திருக்கவும் வேண்டும்.

அடுத்த தலைமுறை என்பது இணையத்தோடு இணைந்த தலைமுறையாக இருந்தாலும், இணையதளத்திற்கு அடிமையான தலைமுறையாக இருந்து விடக்கூடாது என்பதுதான் அனைவரதும் எதிர்பார்பாகவும் இருக்கக்கூடும். அதுபோலவே, இந்த கட்டுரையினை வாசிக்கும் உங்களிடம் இறுதியாக ஓர் கேள்வி. முன்பெல்லாம் இரண்டு மூன்று மணிநேரம் ஓர் திரைப்படத்தைக் கூட உட்கார்ந்திருந்து பார்வையிட்ட நமக்கு, இன்று ஒரு அரைமணி நேரம்கூட அமர்ந்திருந்து ஓர் விடயத்தை ரசிக்கமுடிவதில்லை. அவ்வளவு பொறுமையின்மை நம்மிடம். இதன் விளைவுதான் “பதினைந்தே செக்கன்களுள் நீ எதை வேண்டுமானாலும் செய்துகொள், ஆனால் அது அடுத்தவரை கவனிக்க வைக்கும்படி அமையவேண்டும்” என்ற attention span குறைந்த tiktokபோன்ற application களுக்கு அடிக்கோலிட்டுள்ளது. இந்த குறைந்துவரும் attention span என்பது ஆரோக்கியமானதாக அமையக்கூடுமா?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.