சுட்டுப்பிடிக்க பொலிஸாருக்கு உத்தரவு!

 


தமிழகம் மதுரையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்கச் செல்லும்போது பிரச்சினை எதுவும் ஏற்பட்டால், சுட்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி மாவட்ட பொலிஸ் ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாவட்டத்தில் ரோந்து செல்லும் பொலிசார் பெரும்பாலானோர் துப்பாக்கியுடனே சுற்றித் திரிகின்றனர்.

தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படும் சூழலில் மதுரை மாவட்டத்தில் இப்படி ஒரு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருப்பது, குற்றவாளிகளை மட்டுமன்றி இளைஞர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்மைக் காலமாக மாநிலத்தில் பொலிசார் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் சுப்பிரமணியன் என்ற பொலிஸ் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பொலிசார் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

டிஜிபியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை பொலிசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைக்கத் தொடங்கினர். அதன்படி மதுரையிலும் கமிஷ்னர் பிரேம் ஆனந்த் சின்ஹா பல்வேறு பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

மதுரையில் குற்றச் செயல்களைத் தடுக்க 7 சிறப்புத் தனிப்படைகளை கமிஷ்னர் அமைத்துள்ளார். அதேபோல் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் பல்வேறு பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகளை மேற்கொண்டு வரும் கமிஷ்னர் இடையில் நிருபர்களுக்கும் பேட்டியளித்தார்.

அப்போது அவர், “குற்றச் செயல்கள், குற்றவாளிகள் குறித்த தகவல் கிடைத்தால் தாமதிக்காமல் உடனே குறித்த இடத்திற்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. சமயங்களில் பொலிசார் தங்களைப் பாதுகாக்கத் துப்பாக்கியைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இந்த சூழலில் இப்படி ஒரு உத்தரவுடன் பொலிசார் கையில் துப்பாக்கியுடன் ரோந்து சென்று வருவது மாவட்ட இளைஞர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.