மின்னல் தாக்கி பசு மாடுகள் பலி!
சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் நேற்றிரவு பெய்த இடியுடன் கூடிய மழையின்போது, இடி மின்னல் தாக்கத்தினால் 9 பசுமாடுகள் உயிரிழந்துள்ளன.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேரில்லாவெளி பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி பஞ்சாயுதம் என்பவரின் மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை குறித்த பகுதியில் பெய்தது.
இதன் காரணமாக தனது பண்ணையில் அடைக்கப்பட்ட மாடுகள் மீது மின்னல் தாக்கியதன் உயிரிழந்துள்ளது.
ஞாயிறு மாலை வேளையில் மாடுகளை அடைத்துவிட்டு திங்கள் காலையில் சென்று பார்த்த போது சுமார் ஒன்பது மாடுகள் இறந்து காணப்பட்டதாக பண்ணையாளர் பஞ்சாயுதம் தெரிவித்தார்.
மேற்படி மாடுகள் மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பிரதேசத்திலே பாராமரிக்கப்பட்டு வந்தன. அண்மையில் மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபையினால் சோளப் பயிர் செய்கைக்கு மேய்ச்சல் தரைப்பகுதி வழங்கப்பட்டு இருப்பதன் காரணமாக தற்பொழுது அப்பகுதியிலிருந்து பண்ணையாளர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில் தொப்பிகல, மியான்கல் குளம், தரவை, குடும்பிமலை, ஈரலக்குலம் போன்ற பகுதிகளில் கால்நடைகளை கொண்டு வந்துள்ளனர்.
உயிரிழந்த மாடுகளை பண்ணையாளர்கள் குறித்த இடத்தில் குழிதோண்டி புதைத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக உரிமையாளர் கரடியனாறு மிருக வைத்தியசாலை வைத்திய அதிகாரியிடம் அப்பகுதி கிராமசேவகரிடமும் கரடியனாறு போலீசாரிடமும் தெரியப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
தங்களுடைய கால்நடைகளை வளர்க்க முடியாத நிலைமையில் முன்னைய பகுதியில் இருந்து வெளியேறிய இவ்வாறான பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை