தமிழக விவசாயிகள் எலியை வாயில் கவ்வி போராட்டம்!


 டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கும் தமிழக பொலிசாரைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் வாயில் எலிகளை கவ்வியபடி ஆர்ப்பட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியின் எல்லைகளில் அவர்கள் குவிந்துள்ளதால், தலைநகர் டெல்லியின் சாலைப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. எனினும் கடும் குளிர், பசி, பட்டினி என விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் 500 பேர் இரண்டு முறை புறப்பட்டனர்.

எனினும் அவர்களை செல்லவிடாது தடுத்த பொலிஸார் அய்யாகண்ணுவை அவரது வீட்டில் சிறை வைத்தனர்.

இந்த நிலையில், பொலிஸாரின் கெடுபிடியை கண்டித்தும், டெல்லிக்கு செல்ல விடாமல் தடுப்பதை கண்டித்தும் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் வாயில் எலியை கவ்விபடி இன்று திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.