மட்டக்களப்பு சந்தை புனரமைப்பு பணி ஆரம்பம்!


 மட்டக்களப்பு பொது சந்தை வளாகத்தினை புனரமைக்கும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு பொது சந்தையின் உட்பகுதியில் காணப்படும் பொதுமக்கள் நடமாட்ட பாதையானது நீண்ட காலமாக செப்பனிடப்படாத நிலையில் இருந்தமை தொடர்பில் பொதுச் சந்தை பாவனையாளர்களால் மாநகர சபைக்கு சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

குறிப்பாக மழை காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும் அப்பாதையினை பயன்படுத்த முடியாமலும், வாகனங்களில் பொருட்களை கொண்டு செல்ல இயலாத நிலையும் காணப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகர சபையின் 2020ம் ஆண்டு பாதீட்டு நிதியின் ஊடாக குறித்த நடமாட்ட பாதைகளையும், பொதுச் சந்தை வளாகத்தினையும் புனரமைக்கும் பணிகள் மாநகர ஆணையாளர் மா.தயாபரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவன், பிரதி முதல்வர் க.சித்தியசீலன் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் நேற்று (18) பார்வையிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.