காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்துக்கு நீதிமன்ற தடை!


 வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவியையும் நீதிமன்றில் ஆயராகுமாறு பணித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவிக்கு வழங்கப்பட்டுள்ள கட்டளைப்பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா தலமை பொலிஸ் பரிசோதகரினால் இந்த மன்றிற்கு ARI623/2020 கீழ் தாக்கல் செய்த அறிக்கையின்படி நாளையதினம் (2020.12.18) காலை 10.00 மணிக்கு, வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் காணாமல் போனவர்களின் உறவினர்களினால் நடத்தப்படும் உண்ணாவிரதபோராட்டம் 1400 நாட்களை கடந்துள்ளமையால் இதுவரையும் இந்த குடும்பத்தினருக்கு தீர்வு கிடைக்காதமை சம்பந்தமாக, அன்றையதினம் விளம்பர பலகைகளை காட்சிக்கு வைத்து ஆர்பாட்டம் செய்வதற்கு ஆயத்தமாக இருப்பதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டம் காரணமாக தற்போது பரவிவரும் கொரோனா நோய் மேலும் பரவுவதற்கும், மற்றும் மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இடமுள்ளமையினாலும், தனிமைப்படுத்தல் விதிமுறை இல்லாமல் போகும் என்பதனாலும், இந்த ஆர்பாட்டத்தை நடாத்த இருக்கும் இந்த ஆர்பாட்டகுழுவின் தலைவியாகிய தேக்கவத்தை வவுனியா என்னும் விலாசத்தில் வசிக்கும் காசிப்பிள்ளை ஜெயவனிதா என்பவருக்கு குற்றவியல் நடவடிக்கை முறைசட்டகோவையின், சட்டம் 106(1) பிரிவின் கீழ், இந்த ஆர்பாட்டத்தை நிறுத்துமாறு இத்தால் கட்டளையிடுகின்றேன்.

இது சம்பந்தமாக அறிந்துகொள்வதற்காக தேக்கவத்தை வவுனியா என்னும் விலாசத்தில் வசிக்கும் காசிப்பிள்ளை ஜெயவனிதா ஆகிய உம்மை 2021.01.04 திகதி அன்று காலை 09.30 மணிக்கு இந்த மன்றிற்கு முன்னிலைப்படுமாறு இத்தால் கட்டளையிடுகின்றேன். என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.