காசியும்…. ஃபில்டர் காபியும் - சிறுகதை!



 

“போதும் போதும்! காபி போதும் விசா!” தூக்கத்தில் உளறினார் காசிநாதன்

“என்னங்க என்னாச்சு உங்களுக்கு… தலை முழுகின காபியை பத்தி கனவா? மணி ஏழாவுது இன்னும் தூங்குறீங்களே? எழுந்துருங்க” என்று விசாலாட்சி எழுப்பியதும் தான் காசிநாதன் தான் அயர்ந்து தூங்கிவிட்டதும் கனவில் காபி வந்ததும் தெரிந்தது. கண் விழித்தார்.

“ஒண்ணுமில்ல, சுமார் அஞ்சு மணிக்கு எழுந்தேன் ஒரு அரை மணி தூக்கம் இல்லாம புரண்டு புரண்டு படுத்தேன், அப்புறம் எப்ப தூங்கினேனேனேனே…..” கொட்டாவி விட்டபடியே “தெரியலை” என்று சொல்லிக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தார்.

““அதென்னங்க விசா? என் பெயரைத்தான் முழுசா சொல்லுங்களேன். யு.எஸ் போய்ட்டு வந்தப்புறம் தான் இதை ஆரம்பிச்சீங்க… சரி! நான் போய் கொஞ்சம் காய்கறி மளிகை சாமான்லாம் வாங்கிட்டு வரேன்” என்றாள் விசாலாட்சி

“ஏன் நான் போகக்கூடாதா?”

“நம்ம அப்பார்ட்மெண்ட்-ல தான் கண்டிப்பா சொல்லிட்டாங்களே அறுபது வயசுக்கு மேல இருக்குறவங்க கொரோனா காலத்துல கொஞ்ச நாள் அடக்கி வாசிக்க சொல்லி.. நீங்க 64… நான் 59”

“அம்பத்தொம்போதரை!”

“சரி! சரி கதவை தாழ் போட்டுக்கோங்க; நான் போயிட்டு வந்திடறேன்” என்று மாஸ்க்-கை எடுத்து முகத்தில் மாட்டிக்கொண்டு கைப்பை சகிதம் புறப்பட்டாள் விசாலாட்சி.

எழுந்து பல் தேய்த்து தயாராகி ஹாலுக்கு வந்தார் காசிநாதன்.

அவர் கனவில் வந்த காபி இப்போது மனதில் பெரிய சுமையை ஏற்படுத்தியது. சமையல் அறையில் இப்போது தான் இறக்கிய ஃபில்டர் காபியின் டிகாக்க்ஷன் மணம் மூக்கை துளைத்தது. கடைக்கு போயிட்டு வந்தவுடனே குடிக்கலாம்னு விசா போட்டிருப்பாள் போல இருக்கு என்று எண்ணிக் கொண்டார்.

இப்பொழுதெல்லாம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை விசாலாட்சி மட்டும் தான் காயும் மளிகையும் வாங்கிவர வெளியில் செல்கிறாள். காசிநாதன் வீட்டிலேயே தான் இருக்கிறார். அவருக்கு மனசு எப்போதும் பரபரத்து கொண்டே இருந்தது, இந்த கொரோனா சிறைவாசம் எப்போது முடியும் என்ற ஏக்கம் எப்போதும் அவருக்குள் எட்டிப் பார்க்கும். 

மத்திய அரசு உத்தியோகத்தில் உயர் பதிவியில் இருந்து ஓய்வு பெற்று தடிமனான ஓய்வூதியம் பெறுகிறார். ஒரே மகன் அமெரிக்காவில் பச்சை அட்டை வாங்கி மனைவி மகனுடன் அங்கேயே தொத்திக் கொண்டான். தற்சமயம் விசாலாட்சியும் காசிநாதனும் மகன் வாங்கிய வீட்டுக்கு காவலாய் நகரத்து அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கின்றனர்.

காலை எழுந்து சமையலுக்கு விசாலாட்சிக்கு உதவுவது, வீட்டை பெருக்கி துடைப்பது, துணிகளை சேர்ந்து துவைப்பது, பிறகு குளித்துவிட்டு ஒரு சின்ன பூஜை. பிறகு சாப்பாடு. மதிய தூக்கம். மாலை கொஞ்சம் போல் ஏதாவது ஸ்நாக்ஸ். பிறகு இரவு டிபனுக்கு உதவுவது, இரவு சாப்படு, தூக்கம். பிறகு மறுநாள்….

இப்படியே ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை காசிநாதனுக்குள் ஒரு அலுப்பை தந்தது.

முன்பெல்லாம் உடல் சோர்வோ, மனச்சோர்வோ இருந்தால் ஒரு கப் காபி போதும். எல்லாம் சரியாகிவிடும். ஆபிஸில் டென்ஷனா ஒரு கப் காபி, ஏதாவது மனதில் சந்தோஷமா ஒரு கப் காபி. ஏதாவது சங்கடமா ஒரு கப் காபி, நேரம் நகரவில்லையா ஒரு கப் காபி என ஒரு நாளைக்கு பத்து பதினைந்து காபி குடிப்பார் காசிநாதன்.

“குண்டூசியால உங்க விரலை குத்தினா அங்க ரத்தம் வராது காபி தான் வரும்” என்று விசாலாட்சி கிண்டலடிப்பாள்.

“அப்படியே ஒரு கப் காபி குடிச்சு  க்கிட்டே இந்த ஜோக்கை ரசிக்கலாமே!” என்று அதை மேலும் கலகலபாக்குவார் காசிநாதன்.

இப்படி காபிநாதனாய் இருந்த காசிநாதன்… இன்று ஒரு வாய் காபி குடிக்க ஏகமாய் யோசிக்கிறார்…இதோ எட்டடி நடந்தால் சமையலறை. ஒரு கப் காபி போட்டு குடிக்க பத்து நிமிடம் கூட ஆகாது.. டிக்காக்ஷன் வேறு தயாராய் இருக்கிறது…ஆனால்… ஆனால்…அந்த கொடுமையை நான் எப்படி என் வாயால் சொல்லுவேன்… அதனால் எழுதி விடுகிறேன்…

அது நேர்ந்து இரண்டு வருடம் ஆச்சு. காசி சென்று கங்கையில் மூழ்கி, பண்ண வேண்டிய காரியம் எல்லாம் முடித்து, காசி விஸ்வநாதரின் நல்ல தரிசனம் கிடைத்து புறப்படும் நாளும் வந்தது. அப்பொழுது தான் விதி விசாலாட்சியின் வார்த்தைகளின் வழியே தனது விளையாட்டை துவங்கியது.

“காசிக்கு வந்தா பிடிச்சது எதையாவது விடனும்ங்க.. நான் மாதுளையை விட்டுட்டேன்…நீங்க?” என்றாள் விசாலாட்சி.

“பாகற்காயை விட்டா போச்சு…”

“தாம்பரத்துல பாகற்கா சமைச்சா… தஞ்சாவூர் வரைக்கும் ஓடுற ஆளு நீங்க; அதை விட்டா என்ன விடாட்டி என்ன? ரொம்ப பிடிச்சதை ஏதாவது விடணும்… உங்களால் காபியை விட முடியாது… கழனி தண்ணியாட்டம் இருந்தா கூடா ஒரு மொக்கு மொக்குவீங்க; வேற ஏதாவது யோசிங்க” என்றாள் விசாலாட்சி.

எங்கிருந்தோ ஒரு வீராப்பு வர, “அது என்ன அப்படி சொல்லிட்ட.. இனி நான் காபியை தொடமாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு சபதம் செய்து காபியோடு “டூ” விட்டார் காசிநாதன்.

அதன் பிறகு காபி குடிக்காமல் அவர் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கொடுமையிலும் பெரிய கொடுமை நமக்கு பிடித்த உணவையோ பானத்தையோ நம்மால் உட்கொள்ள முடியாமல் போய் அதை அருகிலிருப்பவர்கள் வெளுத்துகட்டுவதை பார்க்கும் துர்பாக்யம் தான். அதுவும் விசாலாட்சி பிரத்யேமாக தினம் காலையில் டிக்காக்ஷன் போடும் மணமே அவர் மனசை தடுமாறச் செய்யும்.

சிறிது கஷ்டமாக இருந்தாலும் விடாப்பிடியாக இந்த இரண்டு வருடங்களில் அவர் காபியை குறிந்து நினைத்தது கூட கிடையாது என்று சொல்ல இடமில்லையென்றாலும் அவர் காபியை குடித்தது இல்லை என்பது மட்டும் உண்மை. ஆனால் இன்று..இன்று…

‘இன்றைக்கு என்னவாச்சு எனக்கு. ஏன் இப்படி காபிக்கு நாக்கு அலைகிறது’ என்று தன்னையே நொந்து கொண்டார். ‘ஒருவேளை இன்று தனக்கு சந்திராஷ்டமமாய் இருக்குமோ’ என்று காலண்டரை பார்த்தார். அது போன வாரமே முடிந்து போயிருந்தது.

சரி! வைராக்கியத்தை புலன் வென்றுவிட்டது. எப்படியும் விசாலாட்சி வர இன்னும் முக்கால் மணி நேரம் ஆகும் அதற்குள் ஒரு காபியை குடித்து விடலாம் என முடிவு செய்தார். அடுப்பை மூட்டி பாலை வைத்தார்.

சிறு வயதில் தஞ்சாவூர் காபி பேலஸில் காபி குடித்தது துவங்கி ஆறு வருடங்களுக்கு முன்பு மருமகள் பிரசவத்திற்கு உதவ இவரும் விசாலாட்சியும் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு உலகத்திலேயே சிறந்த காபி என்று அவர் மகன் “ஸ்டார் பக்ஸ்”ஸிலிருந்து வாயில் பேர் நுழையாத ஒரு காபியை வாங்கித் தர, அதுவோ காபி குடித்த டம்பளரில் அலம்பிவிட்ட தண்ணி போல் நாற அதை குடித்த மாத்திரத்தில் காசிநாதனின் நாக்கு “என்னை அவமானப்படுத்த எத்தனை நாள் திட்டம்’ என அவரிடம் சண்டைக்கே வந்துவிட்டது. இத்தனையும் அவர் மனக்கண் முன் வந்து போனது.

பால் பொங்கியது. அந்த நான்கைந்து நிமிடங்கள் காசிநாதனின் மனம் நிச்சயம் நிம்மதியாய் இல்லை. இது ‘தவறு தானே தவறு தானே’ என வேப்பிலை அடித்துக் கொண்டே இருந்தது.

விசாலாட்சி போட்டு வைத்திருந்த டிக்காக்ஷனும் சூடாகவே இருந்தது. சுடச்சுட பாலை டம்ளரில் ஊற்றி, சிறுது நாட்டுச் சர்க்கரையை போட்டு டிக்காஷன் ஊற்றி மணக்க மணக்க காபி தயார்.

காபி எடுத்துக் கொண்டு வராண்டாவில் வந்து அமர்ந்தார். காபி மிகமிக சூடாகயிருந்தது. கொஞ்சம் ஆறட்டும் என்று சொல்லிக்கொண்டே தனது மொபைலில் வாட்ஸ் ஆப்பை ஓப்பன் செய்து கொண்டே குடிக்க ஆயத்தமாக. வாட்ஸ்-அப்பில் அவரது ஆறு வயது பேரன் தனது யூட்யூப் சானலில் பதிவேற்றியிருந்த திருக்குறள் குறித்த வீடியோ லோட் ஆகத்துவங்கியது. அமெரிக்காவில் இருந்தாலும் காசிநாதனின் மருமகள் குடும்பத்தில் நிறைய தமிழ் ஆசிரியர்கள் இருந்ததால் காசிநாதனின் பேரன் தமிழழகன் சிறு வயதிலேயே தமிழில் நல்ல ஆர்வம் கொண்டிருந்தான். திருக்குறளை தலைகீழாய் ஒப்பிக்கும் சைல்டு ப்ராடிஜி வேறு.

“நேயர்களே சென்ற வீடியோவில் ஒன்றை செய்வதற்கு முன்பு துணிச்சலோடு முடிவெடுக்க வேண்டும் முடிவெடுத்த பிறகு பின் வாங்கக் கூடாது என்ற கருத்தில் அமைந்த

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு” என்ற திருக்குறளை பார்த்தோம்

இன்று,

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்”

என்ற குறளைப் பார்ப்போம்.

இதன் எளிமையான பொருள் சொல்லுதல் எல்லோருக்கும் எளிது; ஆனால் சொன்னபடி செய்துமுடிப்பது கடினமாகும். இதற்கு பரிமேலழகர் என்ன உரை சொல்றாருன்னா…”

இதை கேட்டுக்கொண்டிருக்கும் போதே மண்டையில் சொடேரென்று அடித்தது போல் இருந்தது காசிநாதனுக்கு. ஆவி பறக்கும் காபியை ஒரு முறை ஏக்கமாய் பார்த்தார். அதற்குள் வாசலில் பெல் அடிக்கும் சப்தம்.

விசாலாட்சி வந்துவிட்டாள். இவர் கதவை திறந்து அவள் கையிலிருந்த பைகளை வாங்கிக் கொண்டார்.

“என்ன கூட்டம், என்ன கூட்டம்… கொரோனா-வ கூறு போட்டு அரை டஜன் பேருக்காவது கொடுத்துட்டுத்தான் நம்ம ஜனங்க ஓய்வாங்க போல இருக்கு” என்றவள் மாஸ்க்கை கழட்டிவிட்டு, கை கால்களை சுத்தம் செய்து கொண்டு வந்தாள்; மூக்கால் வாசம் பிடித்தபடி “என்ன காபி வாசம் தூக்குது” என்றாள்.

“இந்தா நீ கரெக்டா இந்த டையத்துக்கு வருவேன்னு எனக்குத் தெரியும் அதான் தயாரா காபி போட்டு வெச்சேன் நீ வந்துட்ட”

தன் மனதின் குறிப்பறிந்து காபி கொண்டு வந்து கொடுத்த காசிநாதனை பெருமையாக பார்த்துவிட்டும் அதை படக்கென வாங்கி ஒரே மடக்கில் குடித்த விசாலாட்சி, “காபி குடிக்கிறதை நிறுத்தி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆனாலும்; நீங்க போடுற காபி ருசியே தனி தான்; என்ன இன்னும் கொஞ்சம் சூடா இருந்தா நல்லாயிருக்கும்” என்றாள்.

இவள் சொல்வதை காதில் வாங்காதவராய் மனதிற்குள் “இனி என்றைக்குமே காபியை தொட மாட்டேன்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார் காசிநாதன்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.