அச்சுவேலி வங்கி கிளை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!


 தேசிய சேமிப்பு வங்கியின் அச்சுவேலி கிளை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி அந்த வங்கிக் கிளைக்குச் சென்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளதாக கண்டறியட்டப்பட்ட நிலையில் இந்த பணிப்பு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனால் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பணியாற்றும் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் தனது விடுப்புக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் டிசெம்பர் 22ஆம் திகதி தேசிய சேமிப்பு வங்கியின் அச்சுவேலிக் கிளைக்கும் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இராணுவ உத்தியோகத்தர் கொழும்பு திரும்பிய நிலையில் கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில் தேசிய சேமிப்பு வங்கியின் அச்சுவேலிக் கிளை முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் இன்று தொடக்கம் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நாளைய தினம் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு கிடைக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.