தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி?

 


முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தைப்பூச விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும்.


இன்று தைப்பூசம்: விரதம் இருப்பது எப்படி?

முருகப்பெருமானை வழிபடும் முக்கியமான விழாக்களில் ஒன்றாக உள்ளது தைப்பூசம். சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு தரிசனம் அளித்த தினமும் இந்த பூச தினமே என்பதால், அன்றைய தினம் சிவபெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.


இது தவிர பூச நட்சத்திரம், தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் என்பதால், தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வதும் மிகுந்த பலனைத் தரும். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில், பவுர்ணமி திதியோடு கூடிவரும் நாளில் ‘தைப்பூச’ திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசம் முக்கியமானது.


 

மயிலாப்பூரைச் சேர்ந்த சிவனடியார் ஒருவரின் மகள் பூம்பாவை. இவள் பாம்பு தீண்டி இறந்தாள். அவளது அஸ்தியை, அந்த சிவனடியார் பத்திரமாக வைத்திருந்தார். ஒரு முறை திருஞானசம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, தன்னுடைய நிலையைக் கூறி வருந்தினார் சிவனடியார். இதையடுத்து திருஞானசம்பந்தர், அந்த அஸ்தியைக் கொண்டு வரச் சொல்லி இறைவனை நோக்கி பதிகம் பாடி அந்த பெண்ணை உயிர்பித்தார்.


‘மைப்பூசு மொண்கண் மடநல்லூர் மாமயிலைக்

கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் மர்ந்தான்

நெய்ப்பூசு மொண் புழுக்கள் நேரிழையார் கொண்டாடும்

தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்’ என்று அந்த பதிகத்தில் பாடினார்.


இதில் இருந்து தைப்பூசம் மிகவும் பழமைவாய்ந்த திருநாள் என்பது புலனாகியது. ஏனெனில் திருஞானசம்பந்தர் கி.பி. 7, 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார்.


குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த முருகப்பெருமான் இருக்கும் இடங்களில் எல்லாம் தைப்பூசத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி திருக்கோவிலில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.


விரதம் இருப்பது எப்படி?


தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து ருத்திராட்சம் தரித்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும். அன்று உணவு உண்ணாமல் மூன்று வேளையும் பால், பழம் சாப்பிட வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை வணங்கி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். முருகன்கோவிலுக்கும் சென்று வழிபட்டு வரலாம்.


தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இன்னல் இழைத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்று அழித்து துன்பத்தை நீக்கினார்.


இதனால் முக்கோடி தேவர்களும் துன்பம் நீங்கி ஆனந்தம் அடைந்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும். கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் வந்தடையும். எந்நாளும் இளமையுடன் இருப்பர். குழந்தைகளுக்கு கல்வி அபிவிருத்தியாகும். தொழில் மேன்மை உண்டாகும். தைப்பூசம் அன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.


மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோலாலம்பூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள். அன்று கோலாலம்பூரில் மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலைக்கு அதிகாலையில் ஊர்வலமாக நடந்து செல்வர். இதற்கு எட்டுமணி நேரம் பிடிக்கும். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் செல்வர். சுங்கைபத்து ஆற்றில் நீராடிவிட்டு மலைக்கோவிலுக்கு படியேறி செல்வர்.


மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள தண்ணீர் மலையிலும் விழா கொண்டாடப்படும். சிங்கப்பூரில் உள்ள முருகன்கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடைபெறும். அன்று தேரோட்டம் நடைபெறும். திரளான பக்தர்கள் அலகுகுத்தி, நேர்த்திக் கடன் செலுத்துவர். தண்ணீர்மலை கோவிலில் தைப்பூச விழா 3 நாட்கள் நடைபெறும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் விமரிசையாக கொண்டாடுவர்.


வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைமாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதியில் கலந்தார். இதை குறிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் தைமாதத்தில் தைப்பூசத்தன்று அதிகாலை ஜோதிதரிசனம் நடைபெறுகிறது. அன்று மேட்டுக்குப்பத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வள்ளலாரின் விழாவை கொண்டாடுகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.