ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கு புதன்கிழமை பதில்!


 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட்டின் அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தீர்மானித்ததும் அதனைப் பகிரங்கப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைப் பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் பரிந்துரை செய்துள்ளார்.

அத்துடன், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகத்தன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் எனவும் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என்றும் ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் என ஜயனத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

என்றபோதும், ஆதாரங்கள் எவையும் நிருப்பிக்கப்படாதவர்களுக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தருணத்தில் அவசியமற்ற சில விடயங்கள் அந்த அறிக்கையில் காணப்படுவதாகக் கருதுவதாகவும், அவதூறு கற்பிக்கமுனையும் நாடுகள் சிலவற்றை விட இலங்கையர்களான நாம் அமைதியாகவும் ஸ்திரதன்மை மிக்கவர்களாகவும் காணப்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னைய அறிக்கைகளை விட இந்த அறிக்கை மோசமானது எனவும் இலங்கையில் ஆபத்தான போக்கு தென்படுகின்றது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என ஜயனத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதிபொறி, வெளிநாட்டு நீதிபதிகள் ஆகிய விடயங்களைத் தவிர ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழியில் காணப்படும் அனைத்தையும் இலங்கை நிறைவேற்றிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கான தனது பதிலை இலங்கை வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு எதிராக இன்னொரு தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இலங்கைக்கு ஆதரவளிக்கு நட்புநாடுகளையும் ஒத்த நிலைப்பாடுகளைக் கொண்ட நாடுகளையும் கேட்டுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், ஆனால், புதிய தீர்மானம் கிடைப்பதற்காக காத்திருக்கின்றோம் என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.