அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த போராட்டம் இன்று காலை காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாண பொது மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க என்னும் தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்து நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்து, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

மேலும் இதன்போது, இந்த நாட்டில் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமா, இந்த நாட்டின் சட்டங்கள் ஒரு இனத்திற்கு மட்டுமா, அரசியல் கைதிகளின் விடுதலையில் பாரபட்சம் காட்டுவது ஏன் போன்ற பல்வேறு கேள்விகள் அரசாங்கத்திடம் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.