முடிவுக்கு கொண்டுவரப்பட்டது நுவரெலியா போராட்டம்!


நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்றிரவு முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டம் முடிவுக்கு  கொண்டு வரப்பட்டுள்ளது.

கந்தப்பளை- பார்க் தோட்ட முகாமையாளருக்கு எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

திடீரென மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினால் நுவரெலியாவில் தொடர்ந்தும் பதற்றம்!- விசேட அதிரடிபடையினர் குவிப்பு

நுவரெலியா- கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது.

பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை அடுத்தே, நேற்றிரவு 7 மணி முதல் இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

தோட்ட முகாமையாளரின் வீட்டை முற்றுகையிட்டுள்ள பொதுமக்கள், முகாமையாளர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பார்க் தோட்டத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், கொங்கொடியா தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றமையினால், சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிபடையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வீடுகளை அமைப்பதற்கு காணியை வழங்க மறுப்பு தெரிவித்த கந்தப்பளை பார்க் தோட்ட முகாமையாளர், தோட்டத் தொழிலாளர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரனையும் தகாத வார்த்தையினால் பேசியுள்ளதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,தோட்ட முகாமையாளரின் வீட்டை தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காணிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 305 வீடுகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காணிகளை வழங்க தோட்ட முகாமையாளர் இழுத்தடிப்புக்களை மேற்கொண்ட நிலையில், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது, தோட்ட முகாமையாளர் பெருந்தோட்ட மக்களை தரக்குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே முகாமையாளருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.