இரண்டு யுவதிகளை காதலித்த இளைஞனுக்கு அடி!


 ஒரே நேரத்தில் இரண்டு யுவதிகளை காதலித்த இளைஞன், இரண்டு யுவதிகளாலும் யாழ் நகரில் வைத்து தாக்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

நேற்று (6) மாலை யாழ் நகரிலுள்ள ஐஸ்கிறீம் கடையில் இந்த களேபரம் நடந்துள்ளது.

கொக்குவில் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனே, இரண்டு யுவதிகளாலும் கடைக்குள் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடுவதாக கூறும் மேற்படி இளைஞன் சம நேரத்தில் இரண்டு யுவதிகளை காதலித்து வந்துள்ளார்.

இரண்டு யுவதிகளிற்கும் தெரியாமல் எப்படியோ, நான் அவனில்லை பாணியில் நான்கைந்து மாதங்களாக ரீல் விட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த உயர்கல்வி கற்கும் மாணவியை பேஸ்புக் அறிமுகம் மூலம் கடந்த 5 மாதமாக காதலித்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும்
யாழ் புறநகர் பகுதியை சேர்ந்த யுவதியை 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

தன்னை சமூக சேவகனாக காண்பித்து பேஸ்புக்கில் அவர் பல புகைப்படங்களையும் பதவிவேற்றியுள்ளார்.

இதனால், பத்தரை மாற்று தங்கத்தை காதலிப்பதாக நினைத்து யுவதிகளும் அவருடன் காதல் சிறகை விரித்துள்ளனர்.

அவர் ரைம் டேபிள் பிரித்து இரண்டு காதலிகளை சமாளிக்கும் விடயத்தை யாரோ ஒருவர், சமூக ஊடகங்களின் மூலம் அந்த இரண்டு யுவதிகளிற்கும் தெரிவித்துள்ளார். இதையடுத்து இரண்டு யுவதிகளும் தமக்குள் பேசி, உண்மைத்தன்மையை அறிந்து கொண்டனர்.

காதல் மன்னனின் மோசடியால் ஏமாற்றமடைந்த யுவதிகள், அவருக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க நினைத்து, நேற்று மாலை அவரை சிக்க வைத்தனர்.

இரண்டு யுவதிகளும் திட்டமிட்டபடி, பல்கலைகழக மாணவி நேற்று மாலை அவருடன் நகரிலுள்ள குளிர்பான நிலையத்திற்கு சென்றுள்ளார். சற்று நேரம் கழித்து தனது நண்பிகள் சிலருடன் மற்றைய யுவதி அங்கு சென்றுள்ளார்.

இரண்டு காதலிகளையும் ஒரே இடத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தில் மைனர் குஞ்சு திண்டாடி விட்டார்.

இரண்டு யுவதிகளும் அவரின் தொண்டையை பிடித்து கேள்வி கேட்டதில் ஆசாமி திண்டாடி விட்டார். பின்னர் கையில் கிடைத்தவற்றினால் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

பலர் பார்த்திருக்க நடந்த சம்பவத்தினால் மன்மத ராசா நிலைகுலைந்து மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், யுவதிகள் ஆக்ரோசமாக தாக்கியுள்ளனர்.

பின்னர், வர்த்தக நிலையத்தினர் தலையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இந்த “சம்பவத்தின்“ போது மேசையிலிருந்த உடைந்த சில கண்ணாடி கோப்பைகளிற்கான கட்டணத்தையும் மன்மத ராசாவே செலுத்தி விட்டு இடத்தை காலி செய்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.