மோடி வருவதற்குள் பாஜக ஆட்சியா?

 


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக ஆட்சி அமைக்கலாமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாமா என்ற ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி சில கருத்துகளைக் கூறியுள்ளார்,

காங்கிரஸ் திமுக கூட்டணியில் 18 எம் எல் ஏ க்கள் மற்றும் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. என மொத்தம் 19 எம். எல். ஏ.க்களுடன் முதல்வரானார் நாராயணசாமி. முதல்வர் பதவியை எதிர்பார்த்திருந்த நமசிவாயம் ஆட்சி அமைந்தது முதலே அதிருப்தியாகவே இருந்தார். அவருக்கும் நாராயணசாமிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை, பாஜக சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நமச்சிவாயம் மூலமாக ஒவ்வொரு எம் எல் ஏ. வாக இழுத்தது.

தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் உட்பட ஆறு எம் எல் ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். தனவேல் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மொத்தம் 7 எம்.எல்.ஏ.க்களின் பலம் குறைந்து 12எம்.எல்.ஏ.க்களே பெற்றிருந்த காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்வர் நாராயணசாமி அமைச்சரவை பிப்ரவரி 22 ஆம் தேதி ராஜினாமா செய்தது. முதல்வர் நாராயணசாமி துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

புதுச்சேரியில் தமிழகத்தோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் அதுவரை ஆளுநர் வழியான குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்குமா, அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி புதுச்சேரி வரும்போது பாஜகவுக்கு ஆதரவான பாஜகவின் பங்குள்ள ஆட்சி இருக்கவேண்டும் என துடிக்கிறார்கள் பாஜகவினர்.

இதுகுறித்து பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முன்னாள் முதல்வரும் என்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியோடு நீண்ட நேரம் ஆலோசனை செய்திருக்கிறார். இந்தப் பின்னணியில் இன்று (பிப்ரவரி 23) புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி,

“நாராயணசாமி பதவி இழந்ததற்கு அவர்தான் பொறுப்பு. அடுத்து ஆட்சி அமைக்கக் கோரி எனக்கு அழைப்பு வந்தால் அதுபற்றி எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடம் ஆலோசித்து முடிவெடுப்போம்” என்று கூறியுள்ளார்.

ரங்கசாமியின் இந்த வார்த்தைகள் புதுச்சேரி அரசியலை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளன.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.