தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்: ஏன்?


 அடுத்த இரண்டு நாட்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.34 கோடியைக் கடந்துள்ளது. இன்று (பிப்ரவரி 26) காலை 7 மணி வரை, 1,34,72,643 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 16,577 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8,702 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்ததாகக் கேரளாவில் 3,677 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா காரணமாக 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த இரு நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி, மார்ச் 1ஆம் தேதியிருந்து, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட, இதர உடல்நல பிரச்சனை உள்ளவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

இதற்காக கோவிட் 19 தடுப்பூசி போடப்படுவதைக் கண்காணிக்கும், கோ-வின் டிஜிட்டல் தளம் மேம்படுத்தப்படுகிறது. கோவின் 1.0-விலிருந்து கோ-வின் 2.0-வுக்கு மாறுவதால், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (பிப்ரவரி 27 மற்றும் 28) தடுப்பூசி போடும் நிகழ்வுகள் நடக்காது. இந்த மாற்றம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.