வர்த்தக நிலையங்களை உடைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்!


வர்த்தகர்களின் கடும் எதிர்ப்பினையடுத்து, வர்த்தக நிலையங்களை உடைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு − செட்டியார் தெரு பகுதியிலுள்ள சில வர்த்தக நிலையங்கள் இன்று காலை உடைக்கப்பட்டதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் முன்பகுதி ஒன்றரை மீற்றர் அளவிற்கு உடைக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனை வர்த்தகர்கள் ஏற்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. எனினும், இன்றைய தினம் வருகைத் தந்த அதிகாரிகள், வர்த்தக நிலையங்களை முழுமையாக உடைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதையடுத்தே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு – செட்டியார் தெருவில் கடைகள் உடைப்பு : அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்!

கொழும்பு 11 − செட்டியார் தெரு − கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்கள், திடீரென உடைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியிலுள்ள சில கட்டடங்கள் சட்டவிரோத நிர்மாணங்கள் எனக் கூறி, வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருவதாகவும், வர்த்தக நிலையங்கள் உடைக்கப்படுவதற்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக தற்போது குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.