திருகோணமலை நோக்கி பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி!


பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி ஆரம்பமாகியுள்ளது.

பொத்துவிலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று காலை மட்டக்களப்பு நகரை வந்தடைந்ததுடன், அங்கிருந்து தற்போது பேரணி திருகோணமலையை நோக்கிச் செல்கின்றது.

இந்தப் பேரணியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கருப்புக் கொடிகளுடன் கலந்துகொண்டுள்ள நிலையில், கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுக்கொடுக்குமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பி பேரணியை முன்னெடுத்தனர்.

அத்துடன், பேரணியானது திருகோணமலை வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, ‘இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிவேண்டும்’, ‘படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்து’ மற்றும் ‘படுகொலைசெய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடு’ போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துவரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் பொலிஸார், அதிரடிப்படையினரின் பல தடைகளையும் மீறி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.