இரா.சாணக்கியனுக்கு மற்றுமொரு தடை உத்தரவு!!


ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வற்கு தடை உத்தரவுகள் வருகின்ற என்று குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஆனால், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே தடை உத்தரவுகள் போடப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களைத் தூண்டிவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துவதாகத் தெரிவித்து பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அத்துடன், இது குறித்த அறிவிப்புக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று தனக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “இன்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவினால் எனக்கு மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்வதனைத் தடை செய்யுமாறு களுவாஞ்சிக்கொடி பொலிஸாரினால் நீதிமன்றங்களை நாடி பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில், மிகவும் வேடிக்கையான விடயம், கொரோனாவினைக் காரணம் காட்டி நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.

ஆனால், கொழும்பில் கிழக்கு முனையம் துறைமுகத்தினை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பொலிஸாரினால் தடை உத்தரவு வழங்க முடியாது. ஏனென்றால் அது அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயம்.

கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுடைய விடுதலை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை விடுதலை செய்த போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு பொலிஸாரினால் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு இனங்களுக்களுகு எதிராக, மதங்களுக்கு எதிராக பிரச்சினைகளைத் தூண்டும் விவமாக நாங்கள் செயற்படுவோம் எனக்கூறி இந்த தடை உத்தரவினை எடுத்திருந்தாலும் கூட, அப்படியிருந்தால் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு எடுக்கப்பட வேண்டும்.

இனங்களுக்கு எதிரான குழப்பங்களை அவர்களே செய்கின்றனர். அதாவது, எங்களுடைய தமிழ் ஆலயங்களில் மத வழிபாடுகள் செய்வதைத் தடை செய்து, அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து இந்த அரசாங்கம், இந்த ஜனாதிபதி, ஆளுநர் போன்று தொல்பொருள் அதிகாரிகளே இனங்களுக்கெதிரான பிரச்சினைகளைத் தூண்டிவிடுகின்றனரே தவிர நாங்கள் செய்யவில்லை.

இந்தப் போராட்டம் கூட அமைதியான போராட்டம். மூன்றதம் திகதி முதல் ஆறாம் திகதி வரை பல்வேறு விடயங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதிலும் குறிப்பாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி, ஜனாசா எரிப்பு, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட 40 இளைஞர்களின் விடுதலை, தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் விவகாரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” என்று குறிப்பிட்டார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.