வவுனியாவில் காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!


வவுனியா- பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருக்கலம் கல் பகுதியில், தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா என்ற 36 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண், அவரது வீட்டு காணியின் ஒரு பகுதியில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர், சம்பவம் தொடர்பாக அயலவர்களிற்கும் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் சடலத்தினை கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த பெண்ணின் தலைப்பகுதியில், பலத்த காயம் ஒன்றும் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.