நூதன முறையில் கஞ்சா கடத்திய தம்பதியர் கைது!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் உட்பட மூவரை சந்தேகத்தின் பேரில் ஏறாவூர் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கிரான் பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் வீடு ஒன்றில் தேடுதல் நடத்தியபோது அவ்வீட்டிருந்த தும்புத்தடியில் நுட்பமான முறையில் மறைக்கப்பட்டிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதேவேளை, ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் பயணம் செய்த கார் ஒன்றை செங்கலடி பிரதேசத்தில் பொலிஸார் சோதனையிட்டபோது அந்தக் காரிலிருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்ட இந்தக் காரில் குருணாகலிலிருந்து பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்தப் போதைப்பொருள் ஏறாவூரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் மூலமாக சம்மாந்துறைப் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் சந்தேக நபர் தனது மனைவியுடன் சிறிய தொகை ஹொரொயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்டு ஓட்டமாவடி நோக்கிப் பயணம் செய்தபோது பொலிஸார் காரை நிறுத்தி சோதனை செய்தபோதே ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை