யாழில் உளுந்து வடை கேட்டு தகராறு!


 யாழில் உளுந்து வடை கேட்டு தகராறு செய்த நபர் ஒருவருக்கு வடையால் அபிஷேகம் செய்த விசித்திர சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள பிரபல உணவகம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்றையதினம் மதியம் குறித்த உணவகத்துக்கு சென்ற நபர் ஒருவர் உணவக மேசையில் அமர்ந்து வடை கேட்டுள்ளார். எனினும் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் சற்று வேலைப்பளு காரணமாக குறித்த நபரை கண்டுகொள்ளவில்லை.

சற்று நேரத்தில் அவரது மேசைக்கு வந்த சேர்வர் ஒருவர் என்ன வேண்டுமென்று கேட்டுள்ளார். அதற்கு சற்று ஆத்திரப்பட்டவராக வடை வேணுமென்று கடுந்தொனியில் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சேர்வர் ஒரு பாத்திரத்தில் கடலைவடைகள் கொண்டுவந்து வைத்துள்ளார்.

இதைப் பார்த்து மேலும் ஆத்திரப்பட்ட குறித்த நபர், “உதை உன்ர பெண்டிலுக்கு குடு, எனக்கு உளுந்துவடை கொண்டாடா குரங்கா” என்று வாய்க்கு வந்தவாறு பேசியுள்ளார்.

எவ்வாறாயினும் உளுந்துவடை அப்போதுதான் அடுப்பில் பொரிகின்றது என சேர்வர் சொல்லியும் திருப்தியற்ற குறித்த நபர் அவரை மேலும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து கடும் ஆத்திரமுற்ற குறித்த சேர்வர் பின்பக்கம் சென்று ஒரு கூடை நிறைய சுடச்சுட உளுந்து வடைகளைக்கொண்டுவந்து அந்த நபரின் தலையிலே கொட்டியுள்ளார். இதனைக் கண்ட ஏனையோர் அதிர்ச்சியுடன் கடையை விட்டு வெளியேறினர்.

இதேவேளை குறித்த கடையின் முதலாளி அவர்கள் இருவரையும் நையப்புடைத்ததுடன் வடைக்கான கூலியினை இருவரும் தந்தே ஆகவேண்டுமென்று பொலிஸாரை அழைத்து முறையிட்டுள்ளார்.

நாட்டில் உளுந்து ஆயிரம் ரூபாவுக்குமேல் விற்கப்படும் நிலையில் ஒருவர் உளுந்துவடை கேட்டு வன்முறையில் ஈடுபட்டமை யாழ்ப்பாண வரலாற்றிலே முதன்முதலாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.