கொள்கை ரீதியில் ஆட்சி செய்யவும்!

 


எல்லோருடைய கருத்துக்களுக்கும் பதிலளிக்கச் செல்வதன் மூலம் வேலை செய்வதற்கான பெறுமதியான நேரம் விரயமாகிறது.விமர்சனங்களை நியாயமாகக் கருதி சுய சிந்தனையுடன் நாட்டை வழிநடத்துவதே தேவை என பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளது.

பட்டம் பதவிகள் கிடைக்காத சிலர் என்ன சொன்னாலும், மகா சங்கத்தினரும் மக்களும் ஜனாதிபதி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என மகாசங்கத்தினர் தெரிவித்தனர்.

நேற்று (12) பிற்பகல் 8 ஆவது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பௌத்த ஆலோசனை சபை கூட்டத்தின் போதே மகாசங்கத்தினர் இதனை தெரிவித்தனர்.

இதன்போது - சிலரின் வெறுக்கத்தக்க கருத்துக்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கம் குறித்து பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் களங்கப்படுத்தும் நடவடிக்கைகளால் நாம் சோர்வடைந்து விடக்கூடாது.

எஞ்சியுள்ள மூன்றரை வருடங்களுக்கும் மேற்பட்ட காலத்தில் நாட்டை கொள்கை ரீதியாக ஆட்சி செய்யுங்கள்.

அடிப்படைவாதிகளின் தற்போதைய செயற்பாடுகள் பௌத்த ஆலோசனை சபையின் விசேட கவனத்தைப் பெற்றது.

அன்று ஏழைகள்தான் அவர்களது பிடியில் சிக்கினர். இன்று பணக்காரர்கள், சக்திவாய்ந்த, புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கூட அடிப்படைவாதிகளுக்கு பலியாகியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

தூதரக சேவை உள்ளிட்ட பதவிகளுக்கு நியமனங்களை செய்யும் போது ஜனாதிபதி மேற்கொள்ளும் நடைமுறைகளை மகா சங்கத்தினர் பாராட்டியதோடு, தூதரக சேவை பணி ஓய்வு பெறுபவர்களுக்கான ஓய்வு இடமாக மாறக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினர்.

மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கான தூதுவர்கள் பஞ்சசீலத்தை பேணுபவர்களாகவும் கொள்கையுடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பௌத்த தத்துவம், தொல்பொருள் மற்றும் பண்டைய தளங்கள் பற்றிய தவறான வியாக்கியானங்களை நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் மகா சங்கம் வலியுறுத்தியது.

அதற்காக பௌத்த நூல்கள் மற்றும் வெளியீடுகள் ஒழுங்குமுறைச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். திரிபீடக பாதுகாப்பு சபையை செயல்படுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

பௌத்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களான மகா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.