ரெலோ விடுத்துள்ள அறிவிப்பு!!

 


புதிய கூட்டுக்கள், புதிய பெயர்களோடு வருவது தமிழ் தேசியத்திற்கு அவசியமில்லை என தமிழீழ விடுதலை இயக்கம் கருத்துவதாக அதன் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.


டெலோவின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியா வைரவப் புளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.


இதன்போது, கட்சிக்குப் பேச்சாளர் ஒருவர் அவசியம் என அனைவராலும் வலியுறுத்தப்பட்ட நிலையில், குருசாமி சுரேந்திரனைப் பேச்சாளராக நியமிப்பதற்கு கட்சியின் தலைமைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்தது.


இந்நிலையில், குழுக் கூட்டத்தின் பின்னர், ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கட்சியின் பேச்சாளர், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அனைத்து அங்கத்துவ நாடுகளின் ஆதரவினையும் குறிப்பாக இந்தியாவின் ஆதரவினையும் நாங்கள் கோரி நிற்கிறோம்.


தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளைத் தீர்க்கக்கூடிய அரசியல் யாப்பு ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். அதன்மூலம் இந்த நாட்டில் இருக்கின்ற அரசியல் பிரச்சினையானது தீர்வுபெற வேண்டும். இந்த அரசாங்கம் இதனைக் கருத்தில் எடுக்கவேண்டும்.


அத்துடன், 13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அமுல்படுத்தி அதனை அடிப்படையாக வைத்து ஒரு மாகாணசபைத் தேர்தலை மிகவிரைவாக நடத்தி, அரசியல் தீர்விற்கான ஒரு ஆரம்பக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம்.


இதேவேளை, தமிழ் கட்சிகளின் கூட்டுத் தொடர்பாக உறுதியான முடிவினை எடுத்துள்ளோம். 2001ஆம் ஆண்டில் ஆயுத ரிதீயாக பலப்பட்ட ஒரு இனமாக இருந்த நேரத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பலமான ஒரு அமைப்பாக இயங்கி வந்திருக்கின்றது. அதிலிருந்து கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் புதிய கூட்டினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.


எனவே, கூட்டமைப்பு இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்குள்ளே அனைவரும் மீண்டும்வந்து இணைய வேண்டும். புதிய கூட்டுக்கள், புதிய பெயர்களோடு வருவது தமிழ் தேசியத்திற்கு அவசியமில்லை என எமது கட்சி கருத்துகின்றது.


தமிழ் தேசியப் பேரவை என்பதற்கும் அப்பால் தமிழ் மக்களுக்கான ஒரு ஐக்கியம் அவசியமாகின்றது. அதனைக் கருதியே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலேயே இந்தக் கட்சிகள் பிரிந்துநின்று தனித்துச் செயற்ப்பட்டன.


அதே கட்சிகளை வைத்துக்கொண்டு புதிய ஒரு கூட்டை ஆரம்பிப்பதைவிட கருத்து வேறுபாடுகளுக்குக் காரணமான விடயங்களைச் சீர்செய்து கூட்டமைப்பானது மீளக் கட்டியமைக்கப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டு அனைத்துக் கட்சிகளையும் உள்வாங்கிக்கொண்டு பயணிப்பதையே மக்கள் எதிர்பார்கின்றனர்.


அதுவே, எமது மக்களின் எதிர்காலத்திற்கும் அரசியலுக்கும் பலம் சேர்க்கும் என்று எமது கட்சி கருதுகின்றது. அத்துடன், தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் இவ்வாறான ஒரு கட்டமைப்பை உருவாக்கப்போவதாக முன்வைக்கப்படும் கருத்துக்களை நாம் முற்றிலும் மறுதலிக்கின்றோம்.


அனைவரும், ஒருமித்த கொள்கையின் கீழ் செயற்படக்கூடிய வடிவமைப்பைக் கூட்டமைப்பு கொள்ளவேண்டும். அதனைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். மக்களின் விருப்பமாகவே இதனைப் பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.