கொழும்பை மிரட்டிய இந்திய விமானப்படை!

 


கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மட்டுமன்றி கொழும்பு வான்பரப்பும் கூட கடந்த வாரம், முழுவதும் இந்திய விமானப்படை மயமாகவே காணப்பட்டது.

இந்திய விமானப்படையின் கிரண் எம்.கெ 2 பயிற்சி விமானங்கள், தேஜஸ் போர் விமானங்கள், தேஜஸ் பயிற்சி விமானங்கள், துருவ் ஹெலிகொப்டர்கள், சி 130 மற்றும் சி 17 குளோப் மாஸ்டர், விமானங்கள் மற்றும் இந்தியக் கடற்படையின் டோனியர் விமானம் என்று 25 இந்திய விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படைத் தகளத்தில் தரித்து நின்ற காட்சி, அதனை இலங்கை விமானப்படையின் தளமாக அல்லாமல், இந்திய விமானப்படையின் தளம் போலவே மாறியிருந்தது.

இப்போது இலங்கை விமானப்படையிடம் உள்ள போர் விமானங்கள் அல்லது பயிற்சி விமானங்களின் எண்ணிக்கையை விட கூடுதலான இந்திய போர் விமானங்கள் கட்டுநாயக்கவில் தரிந்து நின்றன.

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற விமான சாகச கண்காட்சியில் பங்குபற்றவே இந்திய விமானப்படையின் இந்தப் பாரிய அணி கட்டுநாயக்கவில் தரித்திருந்தது.

சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியா தனது விமானப்படையின் அதிகளவு போர் விமானங்களை ஒரே நேரத்தில் வேறொரு நாட்டின் தளத்தில் தரித்து நிறுத்தியது இது தான் முதல் முறை.

இலங்கை விமானப்படையின் 50ஆவது ஆண்டு விழா 2001ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது இந்திய விமானப்படை விமானங்கள் சில இங்கு வந்து விமான சாகசத்தில் ஈடுபட்டன.

அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மிகவும் முக்கியமானதொரு தருணத்தில் இந்தியா தனது மிகப் பெரிய விமான அணியை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

இந்திய விமானப்படையின் இந்த பெரிய அணி இலங்கை விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் தான் இங்கு வந்தது.

என்றாலும், இந்தளவு பெரியதொரு அணியை அனுப்பி வைக்கும் விடயத்தை, தீர்மானிக்கும் பொறுப்பில் இருந்தது இந்தியாவே என்று தெரிகிறது.

இந்தளவு விமானங்களை கொழும்பில் அணிவகுத்துச் செல்ல வைத்ததன் மூலம், இந்திய சில விடயங்களை குறிப்பால் உணர்த்தியிருக்கிறது. இன்னும் சில இலக்குகளை அடைவதற்கான கதவுகளையும் திறந்து விட்டிருக்கிறது.

இந்தியா அனுப்பி வைத்த போக்குவரத்து விமானங்களை தவிர்ந்த, ஏனைய 23 விமானங்கள் மற்றும் ஹெலிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.

இது, இந்திய விமானப்படையின் பலத்தை கொழும்புக்கு மட்டுமன்றி, சிங்கள மக்களுக்கும் காட்டுவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம்.

ஏனென்றால், இந்தியா தொடர்பாக சிங்களத் தேசியவாத அரசியல்வாதிகளும், பெளத்த பிக்குகளும், அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வந்த கருத்துக்கள், புதுடெல்லியை கோபப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன.

இந்தியாவை அலட்சியம் செய்யும் வகையிலேயே இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளும் காணப்பட்டன.

VDO.AI
கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டைக் கூட, தூக்கி வீசுவதற்கு தற்பாதைய அரச்ஙகம் துணிச்சலைப் பெற்றிருந்தது.

இவ்வாறாக இந்தியா தனது பலத்தை இலங்கைக்கு காண்பிப்பதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்த நிலையில் தான், விமானப்படைத் தளபதியின் அழைப்பு அதற்கு சாதகமானதாக அமைந்தது.

இலங்கைக்கு தனது பெரியதொரு விமானங்களின் அணியை அனுப்பி வைத்த இந்தியாவின் இந்த நகர்வை, இலங்கை அரசாங்கமோ, சீனாவோ கூட எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

கிழக்கு கொள்கலன் முனையத்துக்குள் இந்தியாவின் நுழைவைத் தடுத்து விட்ட திருப்தியில் இருந்த சீனாவுக்கு, கொழும்பு துறைமுக நகரத்துக்கு மேலாக அங்குமிங்கும் பறந்து குத்தியும், எழுந்தும், கரணமடித்தும் சாகசம் செய்த இந்திய விமானப்படையின் விமானங்கள் நிச்சம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இந்தியா தனது வல்லமையைக் காட்டுவதற்கான வாய்ப்பாக மாத்திரம் இந்த விடயத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்தியா தனது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்களை வெளிநாடுகளுக்கு விற்கவும் விரும்புகிறது.

அதற்கு பெரியதொரு இலக்கையும் நிர்ணயித்திருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் இப்போது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய விமானப்படையிலும் இணைக்கப்பட்டு வருகிறது.

இலங்கை விமானப்படைக்கு பாக்கிஸ்தானிடம் இருந்து ஜேஎவ் 17 போர் விமானங்களை வாங்க முற்பட்ட போது அதனை இந்தியா தடுத்து நிறுத்தியது. அதற்குப் பதிலாக தேஜஸ் போர் விமானங்களை விற்கவும் இந்தியா முற்பட்டது.

ஆனால் அது பாக்கிஸ்தான் சீன கூட்டுத் தயாரிப்பான ஜேஎவ் 17 போர் விமானத்தை விட தொழில்நுட்பத் தரம் குறைவானது என்று இலங்கை வாங்கத் தயங்கியது. ஆனால், தற்போது இந்தியா தனது தேஜஸ் போர் விமானத்தை நவீனமயப்படுத்தியிருக்கிறது.

அதன் தொழில்நுட்பங்கள் உயர்த்தப்பட்டு, ஜேஎவ் 17 போர் விமானத்தையும் விட சிறந்த தொழில்நுட்பத் தரத்தை பெற்றிருக்கிறது.

இந்த விமானத்தின் நீளம் 13.2 மீற்றரில் இருந்து, 14.6 மீற்றராக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதன் இயந்திரமும் வலு கூடியதாக மாற்றப்பட்டுள்ளது.

தேஜஸ் எம்.கே 2 போர் விமானத்தின் இறக்கைகளின் அகலம், 8.2 மீற்றரில் இருந்து 8.5 மீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், உயரமும் 4.4 மீற்றரில் இருந்து 4.86 மீற்றராக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், விமானத்தின் மொத்த எடை 13.5 மெட்டறிக் தொன்னில் இருந்து 17.5 தொன்னாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

முன்னர் 3.5 தொன் குண்டுகளை காவிச் செல்லக் கூடிய இந்த தேஜஸ் போர் விமானம் தற்போது 6.5 தொன் எடையைக் காவிச் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களை பொருத்துவதற்கான இடங்களும் 7இல் இருந்து 11ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

விமானத்தின் வேகமும் 1.6 மக் இல் இருந்து 1.8 மக் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளக எரிபொருள் தாங்கியின் கொள்திறன் 2486 லீற்றரில் இருந்து, 33000 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் தேஜஸ் எம்கே 1 விமானத்தை விட எம்.கே 2 விமானத்தின் தரமும், தொழிநுட்ப திறனும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இலங்கை விமானப்படையின் விமானிகள் இந்த விமானங்களை ஓட்டிப் பயிற்சி பெறும் வாய்ப்பையும் இந்தியா பெற்றுக் கொடுத்திருக்கிறது.

இது தற்போது நொந்து நொடிந்து போயிருக்கும், இலங்கை விமானப்படையின் போர் விமான அணிக்கு, தேஜஸ் விமானங்களின் ஆற்றல் குறித்த ஆசையை ஊட்டி விடக் கூடியது. அதற்கும் அப்பால் இந்தியாவிற்கு இன்னொரு திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.

தேஜஸ் போர் விமானங்கள் உள்ளிட்ட விமானங்களை உற்பத்தி செய்யும் ஹிந்துஸ்தான் ஏரோநொட்டிக்ஸ் நிறுவனம், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் தமது விநியோகத் தளங்களை அமைக்கின்ற திட்டத்தையும் கொண்டிருக்கிறது.

இவ்வாறான திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாக கூட இந்தியா இதனைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளன.

இதற்கு இலங்கை அனுமதிக்குமா இல்லையா என்ற கேள்விகள் இருக்கின்றன. எவ்வாறாயினும் இலங்கைக்கு பெரியதொரு விமான அணியை அனுப்பி வைத்துள்ளதன் மூலம், இலங்கையே தனது முதன்மைப் பாதுகாப்புப் பங்காளன் என்பதை மாத்திரம் எடுத்து இந்தியா கூறவில்லை.

அதற்கும் அப்பால் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்று வரும் போது தன்னைக் கடந்து சென்று விட முடியாது என்பதையும் தான் வெளிப்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.