சட்ட மா அதிபர் சார்பில் அடிப்படை ஆட்சேபனை முன்வைப்பு!

 தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் எழுத்தானை ஒன்றினை பிறப்பிக்குமாறு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் என சட்ட மா அதிபர் சார்பில் அடிப்படை ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயதுன்ன கொரயா ஆகியோர் முன்னிலையில்  ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு நேற்று மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தேமுனி டி சில்வா இந்த அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்தார்.

ரஞ்சன் ராமநாயக்க கோரும் நிவாரணத்தை  எழுத்தானை  ஒன்றூடாக வழங்க முடியாது எனக் கூறியே அவர் இந்த அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்தார்.

' இந்த மனு ஊடாக சவாலுக்கு உட்படுத்தப்படும் விடயம், நீதிமன்ற ரிட் அதிகாரத்தை (எழுத்தாணை அதிகாரத்தை) பயன்படுத்தி செயற்படுத்த முடியாது. 

சட்டத்துக்கு மாற்றமான விதிகளைக் கொண்டு இந்த மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இம்மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதிவாதிகள் சார்பில் நான் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைக்கின்றேன். 

அத்துடன் நீதிமன்றை அவமதித்தமை தொடர்பிலான குற்றத்துக்கு குற்றவாளியாக காணப்படும் நபர் மேன் முறையீடு செய்ய முடியாது என ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் ஒன்றின் தீர்ப்பும் சொல்கிறது. ' என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தேமுனி டி சில்வா வாதிட்டார்.

 இதனையடுத்து ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தனது வாதத்தை முன்வைத்தார்.

' கடந்த ஜனவரி 12 ஆம் திகதி, நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக தனது சேவை பெறுனருக்கு 4 வருட கடூழிய  சிறைத் தண்டனையை விதிக்கப்பட்டதன் பின்னர்,   அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது எனும் ஆலோசனையை சட்ட மா  அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு வழங்கியுள்ளார்.

 சட்ட மா அதிபரின் இந்த நிலைப்பாடு சட்டத்துக்கு முரணானது. எனது சேவை பெறுநர் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே, அரசியலமைப்பின் பிரகாரம்  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவராக ஆக மாட்டார்.

அரசியலமைப்பின் 105 (3) ஆம் உறுப்புரைக்கு உட்பட்ட நீதிமன்றத்தை அவமதித்தல் எனும் விடயம்,  குற்றவியல்  விவகார குற்றச்சாட்டு எனும் ரீதியில் தண்டனைக்குரிய குற்றம் என எங்கும் வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை.' என ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதிட்டார்.

இந் நிலையில் மேலதிக வாதப் பிரதிவாதங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்ப்ட்ட நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை  தொடர்பில்  எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு  பிறப்பித்த தடை உத்தரவு எதிர்வரும் மார்ச் 18 ஆம்  திகதிவரை நீடிக்கப்படுவதாக நீதிமன்றினால் அறிவிக்கப்ப்ட்டது.

முன்னதாக தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்ப்ட்டுள்ள கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  கடந்த 2 ஆம் திகதி மனுத் தாக்கல் செய்துள்ளார். மேன் முறையீட்டு நீதிமன்றில்  அவர் இந்த ரிட் மனுவினை (எழுத்தாணை மனு) தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண ஊடாக தாக்கல் செய்துள்ள இம்மனுவில், பிரதிவாதிகளாக பாராளுமன்ற செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவில்,  கடந்த ஜனவரி 12 ஆம் திகதி, நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக தனக்கு  4 வருட கடூழிய  சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் விதித்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறான பின்னணியில், தனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதி இல்லை என சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக கடந்த ஜனவரி 19 ஆம் திகதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், எனினும் பாராளுமன்ற செயலர் இதுவரை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என  நம்பகரமான தகவல்கள் ஊடாக தான் அறிந்துகொண்டதாகவும் குறித்த மனுவில் ரஞ்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந் நிலையிலேயே தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தர்வொன்றினை பிறப்பிக்குமாறு குறித்த ரிட் மனுவூடாக ரஞ்சன் கோரியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.