அழுத்தங்களுக்கு அடிபணியோம்-ரொஷான் ரணசிங்க!

 அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் குறித்து செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இதன் போது மேலும் பதில் வழங்கிய அவர்,

மாகாண சபை தேர்தலை பிற்போடவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. தேர்தலை எம்முறைமையின் பிரகாரம் நடத்துவது என்ற சிக்கல் மாத்திரமே காணப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு பிற்போட்டுள்ளது. கலப்பு தேர்தல் முறைமை முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே முரண்பாடுகளுக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது.

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் அதாவது கலப்பு தேர்தல் முறைமையில் நடத்துவதா என்பது குறித்து இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கவில்லை.

பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தலை மூன்று மாத காலத்திற்குள் நடத்தலாம், புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் மாகாண சபை தேர்தலை நடத்துவதாயில் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கலப்பு தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு அதிக காலம் அவசியமாகும்.

தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டு மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த ஆளும் தரப்பின் கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

இவ்விடயம் குறித்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எத்தரப்பினரது அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம் தான் திட்டமிட்ட வகையில் மாகாண சபை தேர்தலை பிற்போட்டது.

இதற்கு மக்கள் விடுதலை முன்னணியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஆதரவு வழங்கினார்கள். ஆனால் தற்போது அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள் என்றார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.