உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பெண் வைத்தியசாலையில்!


 வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மற்றுமொரு பெண் சுகாதார தொண்டர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்றுகாலை (16.03.2021)வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் மூன்று பெண் சுகாதார தொண்டர்கள் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் மேலும் ஒரு பெண் சுகாதார தொண்டர் மயக்கமடைந்த நிலையில் 1990 எனும் அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

தொடர்ந்து 16 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சுகாதாரத் தொண்டர்கள் கடந்த 8 நாட்களாக  உணவு தவிர்ப்பு  போராட்டத்திலும் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் நேற்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் குறித்த சுகாதார பணியாளர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

கலந்துரையாடலின் போது ஜனாதிபதியுடன் கதைத்து தீர்வினைப் பெற்றுத் தருவதாக  தெரிவித்தது மாத்திரமன்றி அதனை எப்போது பெற்று தருவது என உறுதிமொழி வழங்கவில்லை எனத் தெரிவித்து சுகாதார பணியாளர்கள் நேற்று தொடர்ந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள்.

எனினும் வடக்கு மாகாண ஆளுநரின் உறுதிமொழி  தமக்கு திருப்தி இல்லை என்றதன் அடிப்படையில் தமக்குரிய நியமனம்  பெறுவதில் நீண்ட நாட்கள் செல்லக் கூடிய நிலை காணப்படுவதன் காரணமாக தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் ஈடுபட்டு வருகின்றார்கள்.

தமக்கு நிரந்தர நியமனம் இதற்குரிய சரியான முடிவு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் தங்களை வந்து சந்தித்து தமது பிரச்சினை தொடர்பில் கதைத்தகாகவும், எனினும் இன்றுவரை எவரும் தமது பிரச்சினக்கு தீர்வினைப் பெற்றுத் தரவில்லை எனவும் சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.